சுயேச்சை வேட்பாளராகவே ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மனு தாக்கல்!
தூத்துக்குடி: தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் இல்லாத காரணத்தால் சுயேச்சை வேட்பாளராகவே மனு தாக்கல் செய்துள்ளனராம்.
ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்ட கட்சிதான் என்ற போதிலும், அது மாநிலக் கட்சியாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் அக்கட்சி சார்பில் போட்டியிடுவேர் சுயேச்சையாகவே கருதப்படுவார்களாம்.
அந்த வகையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த இக்கட்சியின் உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் சுயேச்சைகளாகவே கருதப்படுவர்.
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ரவிகுமாரிடம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புஷ்பராயன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் புஷ்பராயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் வேட்பு மனுவை ஆன்லைனின் டவுண்லோடு செய்திருந்தோம். ஆனால் அச்சிடப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கும், ஆன்லைன் படிவத்திற்கும் அதிகளவில் வித்தியாசங்கள் இருந்தது.
இதனால் ஆட்சியரும், அதிகாரிகளும் இரண்டு மனுக்களையும் ஒப்பிட்டு பார்த்தனர். மேலும், என்னுடைய வேட்பு மனுவை முன்மொழிந்த 10பேரையும் நேரில் அழைத்துவருமாறு அதிகாரிகள் கூறினார்.
எனக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான வீடு, நிலம் உள்ளது. எனது பெயரில் ரூ.40ஆயிரமும், எனது மனைவி பேரில் ரூ.25ஆயிரமும் வங்கி கணக்கில் உள்ளது. எனது மனைவியிடம் 50 பவுன் நகை உள்ளது. என்மீது 385 வழக்குகள் பதிவு செய்ய்பபட்டுள்ளது. இதற்காக குற்றப்பத்திரிக்கைகள் எதுவும் தாக்கல்
செய்யப்படவில்லை. எனது பிரசாரத்தை நாளை முதல் அதாவது இன்று முதல் தொடங்குகிறேன் என்றார்.
இதேபோல நேற்று கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமாரும், நெல்லை தொகுதியில் மை.பா.ஜேசுராஜும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.