ஜப்பானில் அணு உலைகளை மூடல்.. ஆனால், இந்தியாவுடன் ஜப்பான் அணு ஒப்பந்தமா?: உதயகுமார்
கூடங்குளம் அணு உலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜப்பான் புகுஷிமாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அங்கிருந்த அணுஉலைகள் பாதிக்கப்பட்டது. இதனால் அதில் இருந்து வெளியேறிய அணுக்கதிர் வீச்சால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புகுஷிமா அணு உலைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து தற்போது அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பானில் உள்ள அணுக்கழிவுகள் கடலில் கலந்துள்ளதால் மீன்கள் அழிந்து வருகின்றன. அங்குள்ள மீன்களை வாங்குவதற்கு எந்த நாடும் முன்வரவில்லை. தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாடான ஜப்பான் அணு உலைகள் அனைத்தையும் மூடிவிட்டன. எனவே இந்தியாவும் அணு உலைகள் அனைத்தையும் மூட வேண்டும்.
இதனிடையே இந்தியாவும்-ஜப்பானும் அணுசக்தி ஒப்பந்தம் போடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜப்பானில் உள்ள அணுஉலை பொருட்களை இங்குள்ள அணுஉலைகளில் பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.