தீவிர அரசியலில் ஈடுபடப்போறேன்... உதயநிதி ஸ்டாலின் திடீர் அறிவிப்பு
தீவிர அரசியலில் ஈடுபடும் நேரம் வந்து விட்டதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அரசியலில்தான் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே அரசியலில் ஈடுபட்டதாகவும், தற்போது தீவிர அரசியலில் ஈடுபடும் நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி, திரைப்படங்களை தயாரித்து வந்தார். ஹீரோவாக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நிமிர் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின். தனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
உதயநிதி உண்ணாவிரதம்
சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். இப்போராட்டத்தின்போது உதயநிதி முன்னிலைபடுத்தப்பட்டார். அப்போதே அவர் அரசியலுக்கு வருவார் என பரவலாக பேசப்பட்டது.
அரசியலில் ஆர்வம்
வரும் சட்டசபைத் தேர்தலில் இருந்து நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு முன்பு மாநிலம் முழுவதும் நற்பணி மன்றத்துக்கு ஆதரவாக புதிய அமைப்புகளை தொடங்கி வருகிறார்.உதயநிதியின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்துள்ளார். இனிவரும் சட்டசபை தேர்தலில் உதயநிதியும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
தீவிர அரசியல்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலில் ஈடுபட தயாராகி வருகின்றனர். இப்போது உதயநிதியும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். கருணாநிதி குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறை வாரிசும் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வரிவிலக்கு அரசியல்
சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே அரசியலில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள உதயநிதி, தாத்தா, அப்பா உள்ளிட்ட பலருக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதாக கூறியுள்ளார். தனது திரைப்படத்திற்கு வரி விலக்கு மறுக்கப்பட்டபோதே தான் அரசியலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மு க முத்து முதல் உதயநிதி வரை
திமுகவில் எம்ஜிஆர் இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக முக முத்துவை களமிறக்கினார் கருணாநிதி. ஆனால் அவர் வெற்றிபெறவில்லை. பின்னர் திமுகவில் ஸ்டாலின் மெல்ல மெல்ல ஏறுமுகம் காட்டினார். அழகிரியும் அரசியலுக்கு வந்து மத்திய அமைச்சரானார். இப்போது மூன்றாம் தலைமுறை வாரிசாக உதயநிதியும் களமிறங்குகிறார். இன்னும் எத்தனை வாரிசுகள் வருவார்களோ.