போக்குவரத்து கழகத்தை திமுகதான் கடனில் விட்டிருச்சே... அதை அடைக்க நீங்கள் என்ன செய்தீங்க?... உதயநிதி
போக்குவரத்து கழகத்தை திமுகதான் கடனில் விட்டு சென்றதாக கூறுகிறீர்களே, அந்த கடனை அடைக்க அதிமுக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அலங்காநல்லூர்: திமுக விட்டு சென்ற போக்குவரத்து கடனை போக்க அதிமுக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தை முன்னர் ஆட்சி செய்த திமுக போக்குவரத்து துறையை கடனில் தத்தளிக்க விட்டு சென்றதால் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும் பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகதான் காரணம் என்று குற்றம்சாட்டியது.
இதற்கு திமுகவினர் தக்க பதிலடிகளை கொடுத்தனர். எனினும் புதிதாக அரசியலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், முதல்முறையாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நேற்று முந்தைய தினம் திமுக சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனிடையே பேருந்து கட்டணத்தை தமிழக அரசு லேசாக குறைத்தது. இது போதாது என்றும் கட்டண உயர்வையே ரத்து செய்ய வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து இன்று அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அலங்காநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பேருந்து கட்டணம் மிகவும் குறைந்த அளவே குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்க திமுகத்தான் காரணம் என்கிறார்களே, அந்த கடனை போக்க இவர்கள் இத்தனை ஆண்டுகள் என்னதான் செய்தார்கள்?
ரஜினி, கமல் அரசியல் வருவது வரவேற்கத்தக்கது என்றார் உதயநிதி.