கரன்சி எண்ணுபவர்கள் நாளை கம்பி எண்ணுவார்கள்-"பழுத்த அரசியல்வாதி" சொல்வதை கேளுங்க மக்களே!
Recommended Video
சென்னை: கரன்சி எண்ணுபவர்கள் நாளை கம்பி எண்ணுவார்கள் என்று திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் சிக்கி திளைத்து கொண்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி விலகுமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதிமுக அரசோ குற்றம்சாட்டுவது எதிர்க்கட்சியின் கடமை என்று கூறிவிட்டது. இந்நிலையில் அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் திமுக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
உதயநிதி ஸ்டாலின்
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர் கே நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
மிகப் பெரிய வெற்றி
அப்போது அவர் பேசுகையில் அதிமுக அரசுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த திமுக தலைவருக்கு நன்றி. நான் அதிகமாக பேச விரும்பவில்லை. நமது திமுக தலைவர் முப்பெரும் விழாவில் சொன்னது போல் இந்த ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும்.
ஜெயில் கம்பிகள்
இப்போது கரன்சி நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த அதிமுக அமைச்சர்கள் எல்லாம் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயில் கம்பிகளை எண்ணுவார்கள் என்றார் அவர். முன்னதாக மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ பேசினார்.
அதிர்ச்சி
அப்போது பரட்டையையும் சப்பானியையும் அதிமுக அரசையும் விரட்டி அடிப்பதற்காக நமது இளைய தளபதி (விஜய் இல்லைங்க இது உதயநிதி ஸ்டாலின்) வடக்கு மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த தொகுதி நிச்சயம் வெற்றி அடையும் என்றார். நேற்றுதான் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல் முறையாக கொடியை பிடித்தார் உதயநிதி. அதற்குள் ஏதோ பழுத்த அரசியல்வாதியை போல் அதிமுக அமைச்சர்களை பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.