எத்தனையோ நிதியை பார்த்துவிட்டேனு சொல்றீங்களே... கொஞ்சம் இதையும் பாருங்க அமைச்சரே!... உதயநிதி
எத்தனையோ நிதியை பார்த்துவிட்டோம் என்று கூறும் அமைச்சர் ஜெயக்குமார், ரூ. 7 லட்சம் கோடி நிதி பற்றாகுறை குறித்து பார்க்கட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: எத்தனையோ நிதியை பார்த்துவிட்டோம், உதயநிதியை பார்க்க மாட்டோமா என்று அமைச்சர் ஜெயக்குமார் முன்வைத்த விமர்சனத்துக்கு பதிலடியாக எத்தனையோ நிதி பார்த்த அமைச்சர் ஜெயக்குமார், ரூ. 7 லட்சம் கோடி பற்றாக்குறை நிதியையும் பார்க்கட்டும் என்று நடிகரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் நக்கலாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உதய நிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் குதிக்க போவதாக அறிவித்தார். மேலும் தான் தாத்தா, அப்பா உள்ளிட்ட பலருக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது சமுத்திரம் மாதிரி யார் வேண்டுமானாலும் குதிக்கலாம்.
ஆனால் கரை சேருவதுதான் முக்கியம். அதுபோல் அதிமுக கப்பல் மட்டுமே கரை சேர்ந்துள்ளது. மக்களின் ஆதரவு அதிமுகவுக்குத்தான். எனவே உதயநிதி என்ன எத்தனை நிதி வந்தாலும் நாங்கள் அவர்களை சமாளிக்கும் திராணி எங்களுக்கு உண்டு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாலர்களிடம் கூறுகையில், நான் ஏற்கனவே வந்துவிட்டேன், தொண்டர்களுடன் பயணிப்பதே எனது அரசியல். எத்தனையோ நிதியை பார்த்துவிட்டோம் என கூறும் அமைச்சர் ஜெயக்குமார், ரூ.7 லட்சம் கோடி பற்றாக்குறையை பார்க்கட்டும் என்றார் உதயநிதி. இவர் குறிப்பிடும் தொகையானது போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இழப்பீடு ஆகும்.