வந்து விட்டார் விஜய பிரபாகரன்.. தேமுதிகவுக்கு என்ன லாபம்.. மீண்டும் தேறி வருமா?
மக்கள் செல்வாக்கு உதயநிதிக்கா? விஜய பிரபாகரனுக்கா?
சென்னை: ஜனநாயக நாட்டில்... முடியாட்சியின் வாரிசு அரசியலா???? மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா... என்று பெருமைப்பட்டுக் கொண்டே இருந்தாலும், வாரிசு அரசியல்தான் தலைதூக்கி வருகிறது.
நேரு - இந்திரா, இந்திரா-ராகுல் என்று தொடங்கியது இந்த வரலாறு. இது நாடு முழுவதும் விரிவடைந்து... ஃபரூக் அப்துல்லா தொடங்கி, முலாயம் சிங் யாதவ் தொடங்கி, லல்லுவரை போய்க் கொண்டே இருந்தது.
வாரிசுகள்
நம் மாநிலத்தை பொறுத்தவரை கருணாநிதி ஸ்டாலினை பகிரங்கமாகவே அறிவித்தார். அறிவித்து எத்தனையோ வருடங்கள் ஆனாலும் பதவியை இப்போதுதான் பிடித்துள்ளார் ஸ்டாலின். அதிமுகவுக்கு தற்போதைக்கு வாரிசு பஞ்சாயத்து இல்லை. இப்போது முக்கிய கட்சியின் வாரிசுகள் என்று எடுத்து கொண்டால் திமுகவின் உதயநிதி ஸ்டாலினும், தேமுதிகவின் விஜயபிரபாகரனும்தான். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் களத்தில் இறக்கிவிடப்பட்டு இருக்கிறார்கள்.
சூழல் கிடையாது
திமுக ஏற்கனவே பன்மடங்கு பாரம்பரியம் மிக்க அசுர வளர்ச்சியில்தான் உள்ளது. அப்படித்தான் கருணாநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு போய் இருக்கிறார். இனி ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பதுதான் ஒன்றுதான் பாக்கி. இப்படி இருக்கும்போது, திமுகவில் உதயநிதிக்கு வேலையே கிடையாது.. அவர் உள்ளே நுழைந்து அரசியல் செய்வதற்கான சூழலே கிடையாது. உதயநிதி வந்துதான் இதை செய்ய வேண்டும், மாற்ற வேண்டும் என்ற நிலை தற்போது கிடையவே கிடையாது!!
விஜயகாந்த் என்ற பிம்பம்
ஆனால் தேமுதிக அப்படி இல்லை! விஜயகாந்த் என்ற பிம்பத்தை மட்டுமே வைத்து உருவான கட்சி அது... தேமுதிக என்பது முழுக்க முழுக்க விஜயகாந்த்தின் உழைப்பு, விஜயகாந்தின் ஈர மனசு, விஜயகாந்தின் துணிச்சல், விஜயகாந்தின் அப்பட்டமாக பேசும் பேச்சு, என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட மாபெரும் கட்டிடம் அது!! தள்ளாமையின் கொடுமை இன்று அந்த கட்சிக்கு சோதனைக்காலமாக உள்ளது. அசுர வளர்ச்சியிலிருந்து கட்டெறும்பாகி கொண்டிருக்கிறது... கூடாரம் காலியாக கொண்டிருக்கிறது... கட்சி தேய்ந்து பலமிழந்து கொண்டிருக்கிறது... விஜயகாந்த் பட்ட பாடெல்லாம் நொறுங்கி இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது!!
சரியான தேர்வு
அதை தூக்கி நிறுத்தவோ, ஒருங்கிணைக்கவோ, வலுப்படுத்தவோ, பலப்படுத்தவோ, பழுது பார்க்கவோ யாருமே இல்லை! இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜயபிரபாகரன் இறக்கி விடப்பட்டிருக்கிறார். இது மிகச்சரியான நேரம் என்று மட்டுமல்ல, சரியான தேர்வு என்றும்தான் சொல்ல வேண்டும். அரசியல் அனுபவம் விஜயபிரபாகரனுக்கு இல்லைதான்.. ஆனால் விஜயகாந்த்தின் மகன் என்ற ஒரு தகுதியுடன் உள்ளே நுழைந்தாலும், மக்கள் ஆதரவை எளிதாக வெல்வார் என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினருக்கு இருக்கிறது.
யதார்த்தம்
அரசியல் பயணத்திற்கான பிள்ளையார் சுழியை தற்போது போட்டுள்ள விஜயபிரபாகரன், "என் அப்பா செய்ததை நான் ஒன்றும் புதுசா செய்ய போறது இல்லை, அவர் எவ்வளவோ செய்துட்டார், அதை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்" என்று சொன்னார். இது ஒரு வகையில் பாராட்ட கூடியதே, அதை செய்வேன், இதை செய்வேன் என்று அருள்வாக்கு சொல்லாமல், வாக்குறுதிகளை அள்ளி வீசாமல், தன் அப்பா செய்ததையே மக்களிடம் எடுத்து செல்வதாக சொல்லியிருப்பது யதார்த்தத்தின் வெளிப்பாடே.
திறந்தே இருக்கும் கதவுகள்
விஜயகாந்த் என்று வந்துவிட்டால் அங்கே காழ்ப்புணர்ச்சி இருக்காது... விரோதம்... பகை... சூழ்ச்சி... வன்மம்... எதுவுமே விஜயகாந்த்மேல் தமிழக மக்களுக்கு வராது. வேறு எந்த அரசியல் தலைவர்களுக்கும் கிடைக்காத சிறப்பு இது... அதற்கு காரணம் அவரது குணம்!! அந்த குணத்தை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ ஒருக்காலும் முடியாது. இதை விஜயபிரபாகரன் மனதில் வைத்து கொள்ள வேண்டும். பொத்தல் விழுந்த ஆடைக்கு ஒரு சிறந்த தையற்காரனைபோல, வலுவிழந்த நோயாளிக்கு சிறந்த மருத்துவரை போல... தேமுதிகவிற்கு விஜயபிரபாகரன் வரவேண்டும்... அதற்கான சாத்தியக்கூறுகளும், கட்சியின் அனைத்து வாசற்கதவுகளும் திறந்தே விடப்பட்டுள்ளன. இதை சரியாக பயன்படுத்தி கொள்வாரா விஜயபிரபாகரன்.
சின்ன கேப்டன்
கேப்டன் என்று செல்லப் பெயர் கொண்டவர் விஜயகாந்த். அவரது மகனுக்கும் சின்ன கேப்டன், துணை கேப்டன் என்று செல்லப் பெயர் சூட்டி மகிழலாம்.. ரொம்ப எளிதானதுதான்.. ஆனால் "வைஸ்" கேப்டனாக அவர் செயல்பட வேண்டியது மிக மிக முக்கியமானது என்பதை விஜயபிரபாகரன் உணர வேண்டும். அப்பாவின் கட்சி என்ற மிதப்பு வராமல், அடி மட்டத் தொண்டனாக அவர் உழைத்தால்தான் கிடைத்த பொறுப்புக்கு வலு சேர்க்க முடியும். இல்லாவிட்டால் மக்களால் மட்டுமல்ல, கட்சியினராலும் கூட அவர் ஒதுக்கப்படவே செய்வார்.