அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டினால்.. திமுக காரங்க பெயிண்ட் அடிக்கிறாங்களே!
Recommended Video
நாகை: கேரளத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக உதயநிதி ஸ்டாலின் சார்பாக நாகை திமுகவினர் இயந்திர படகை அனுப்பியுள்ளனர்.
கேரளத்தில் மழை, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளத்தால் அம்மாநில மக்கள் தங்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளத்துக்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்ல தொண்டர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் கேரளா சினிமா துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க படகு அனுப்புமாறு உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று நாகை தெற்கு மாவட்ட திமுகவினருக்கு உதயநிதி உத்தரவிட்டார். இதையடுத்து சுமார் 1.50 லட்சம் மதிப்பிலான இயந்திரம் பொருந்திய ஃபைபர் படகு ஒன்று லாரி மூலம் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
படகில் திமுக கொடி கட்டப்பட்டு உதயநிதி ஸ்டாலின் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் உதயசூரியன் படமும் போடப்பட்டிருந்தது.
சென்னையை பெருவெள்ளம் சூழ்ந்து சூறையாடியபோது, அதிமுகவினர் மக்களுக்கு விநியோகித்த உதவிப் பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்டி கொடுத்தனர். அத்தோடு நில்லாமல் மற்றவர்கள் கொடுத்த பொருட்களையும் கூட பறித்து அதிலும் ஸ்டிக்கர் ஒட்டி பெரும் சர்ச்சையாக்கினர் என்பது நினைவிருக்கலாம்.