உடுமலைப்பேட்டை ஆணவக் கொலை.. தலைமறைவாக இருந்த கவுசல்யாவின் தாயார் சரண்
தேனி: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சங்கர், 22. இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கவுசல்யாவை காதலித்தார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 13ம் தேதி உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்களைக் வாங்கிக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், கவுசல்யா மற்றும் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கணவன், மனைவி படுகாயமடைந்து மயங்கி கீழே விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த சங்கர், கவுசல்யாவை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.
இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த ஆணவக்கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை குற்றவாளிகள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கவுசல்யாவின் தாய்மாமாவை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
படுகாயமடைந்த கவுசல்யா கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கொலை தொடர்பாக பல்லடம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த கவுசல்யா, குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவுசல்யா சிகிச்சை முடிந்து நேற்று தனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார்.
தலைமறைவாக இருந்த தாயார் அன்னலட்சுமியை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் இன்று சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சுந்தரி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.