தமிழகத்தை அதிரவைத்த உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு கடந்து வந்த பாதை!
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக நடுரோட்டில் வைத்து வெட்டி கொல்லப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. இந்நிலையில் அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்
Recommended Video
திருப்பூர் : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக நடுரோட்டில் வைத்து வெட்டி கொல்லப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு இது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க தடுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
ஜூலை 11, 2015: பழநியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் கவுசல்யா உடுமலைப்பேட்டையை சேர்ந்த தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மார்ச் 13, 2016: கவுசல்யாவின் உறவினர்களால், சங்கர் மற்றும் கவுசல்யா ஆகியோர் கொடூரமான முறையில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வெட்டப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சங்கர் உயிரிழந்தார்.
ஜூன் 16, 2016 : கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி, தாயார் அன்னலட்சுமி, செல்வக்குமார், மைக்கேல், திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டி வீரன்பட்டியைச் சேர்ந்த மணி கண்டன், பாண்டித்துரை, தன்ராஜ் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 16, 2016: சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தாய், தந்தை உட்பட 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆகஸ்ட் 19, 2017- திருப்பூர் ஆட்சியராக இருந்த ஜெயந்தி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
நவம்பர் 17, 2016- விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைப்பு
டிசம்பர் 12, 2017 : ஓன்றரை ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர் இன்று திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கவுசல்யாவின் தாய், தந்தை உள்பட 11 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.