மதுரை வானில் ஏலியன்ஸின் “பறக்கும் தட்டு”?- விண்ணில் பறந்த மர்மப் பொருளால் பரபரப்பு
மதுரை: மதுரையில் வானில் பறந்த மர்மான எரிந்த பொருள் ஒன்றால் யூ.எப்.ஓ, ஏலியன்ஸ் என்று பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வானில் திடீரென்று வட்டவடிவிலான பொருள் ஒன்று வானில் பறந்துள்ளது. இது செய்தியாளர் ஒருவருடைய கண்களிலும், பொதுமக்களுக்கும் நன்கு தெரிந்துள்ளது.
இதனையடுத்து கொழுந்துவிட்டு எரியும் தீப் பந்தம் போன்று 4 இடங்களில் பறந்த அந்த மர்மப் பொருள் 4 நிமிடங்கள் வானில் காட்சியளித்தது. இதனை அச்செய்தியாளர் படம்பிடித்துள்ளார். பறக்கும் தட்டு போன்று அந்த பொருள் காட்சியளித்துள்ளதால் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வந்தார்களாக என்று பொதுமக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.
இந்த காட்சியை பார்த்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இந்த தகவலை தங்களது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் திகிலுடனும், அதிசயத்துடனும் பகிர்ந்துகொண்டனர். எனினும், இதுகுறித்த விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உண்மையில் பறக்கும் தட்டு என்று எதுவுமே கிடையாது. மேலைநாடுகளில், பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருவதுண்டு. நம் நாட்டிலும் கூட அப்படிப்பட்ட செய்திகள் திடீரென வெளியாகும்.
வானில் இப்படி பறக்கும் தட்டு போன்று தென்படுகின்ற பொருள், காஸ்மிக் கதிர் ஆய்வு, வானிலை ஆய்வு ஆகியவற்றுக்காக உயரே செலுத்தப்படும் பலூன்களாக இருக்கக்கூடும். மிக உயரத்தில் இருக்கின்ற இவற்றின் மீது ஒளி படும்போது, பறக்கும் தட்டு போன்று தோன்றும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.