மோடிக்கு எதிரான போராட்டத்தின் போது இந்தியக் கொடி கிழிப்பு... மன்னிப்பு கேட்டது பிரிட்டன் அரசு
மோடிக்கு எதிராக லண்டனில் ஏற்பட்ட போராட்டத்தின்போது இந்தியக் கொடி கிழிக்கப்பட்டதற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்டது.
Recommended Video
லண்டன்: பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் ஏற்பட்ட போராட்டத்தின்போது இந்தியக் கொடி கிழிக்கப்பட்டதை அடுத்து பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த நேரத்தில் சென்னையில் நடந்த ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நிகழ்ச்சிக்காக சென்னைக்கு மோடி வந்திருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் நடத்திய இந்த போராட்டத்தில் கருப்பு பலூன்களை பறக்க வைத்தும், கருப்பு உடை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர்.
டுவிட்டரில் நம்பர் 1
இந்நிலையில் கோ பேக் மோடி என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்து வைத்தனர். இதையடுத்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டானது.
பலாத்கார சம்பவங்கள்
இதையடுத்து காஷ்மீர், கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒரு கோயிலில் அடைத்து வைக்கப்பட்டு 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதுபோல் உ.பி மாநிலம், உன்னவ் தொகுதியில் 16 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏ ஒருவர் பலாத்காரம் செய்தார். இந்த இரு சம்பவங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லண்டன் தமிழர்கள் போராட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடி லண்டனுக்கும் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள தமிழர்கள் மோடியே திரும்பி போ என சென்னையில் நடத்தியது போல் போராட்டத்தை நடத்தினர். குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை கண்டனப் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.
மோடிக்கு எதிரான போராட்டம்
இந்தியாவில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மோடியின் கார் சென்ற பாதையான டவுனீங் சாலை மற்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கம் அருகே இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 53 நாடுகளில் காமன்வெல்த்துக்கான அந்தந்த நாடுகளில் கொடி ஏற்றப்பட்டிருந்தது. அதில் இந்தியக் கொடியை யாரோ சிலர் எடுத்து கிழித்ததாக கூறப்படுகிறது. காலிஸ்தான் இனக்குழுவினர் இதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிடம் மன்னிப்பு
இந்நிலையில் கொடி கிழிக்கப்பட்ட சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் கிழிக்கப்பட்ட கொடிக்கு பதிலாக வேறொரு புதிய கொடியையும் ஏற்றியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இந்திய கொடியை கிழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.