ரேசன் கடையில உளுந்து விற்பனையை நிறுத்த உத்தரவு போடலையே... திண்டுக்கல் சீனிவாசன்
ரேசன் கடைகளில் உளுந்து விற்பனையை நிறுத்தி விட்டதாக யாரும் கூறவில்லையே என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்: அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ரேசனின் உளுந்தப்பருப்பு நிறுத்தப்படுவதாக அரசு அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரேசன் கடைகளில் உளுந்த பருப்பு விநியோகம் நிறுத்தப்பட்டு பல மாதங்களாகி விட்டது. கடந்த பிப்ரவரி மாதங்களில் இருந்தே உளுந்தப்பருப்பு விற்பனை செய்யப்படுவதில்லை.
துவரம் பருப்பு என்ற பெயரில் மசூர் பருப்பு, கனடியன் பருப்புகளை விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் காமராஜ், ரேசன் கடைகளில் ஏதாவது ஒரு பருப்பு ஒரு கிலோ வழங்கப்படும் என்று கூறினார்.
அதே நேரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூவோ, ரேசன் கடைகளில் உளுந்தபருப்புதான் வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை என்று பேட்டி கொடுத்து அவர் பங்குக்கு பரபரப்பை பற்ற வைத்தார்.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சீனிவாசன், ரேசன் கடைகளில் உளுந்தப்பருப்பு விற்பனையை நிறுத்தச் சொல்லி அரசு உத்தரவு எதுவும் போடவில்லை என்று கூறினார்.
அரசு அதிகாரிகளுடனான ஆளுநர் ஆலோசனை வரவேற்கத்தக்கது என்று கூறிய அமைச்சர் சீனிவாசன் எதிர்கட்சிகள் என்றாலே குறை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர் என்றார்.
உளுந்தப்பருப்பு படுற பாட்டை பார்த்தா இட்லியும், வடையும் அழுதுரும் போல இருக்கே!