For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழி நெடுக கவிதைகள்... 2 மணி நேர ஆலாபனை....!

Google Oneindia Tamil News

Recommended Video

    உங்களோட '96' அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே!- வீடியோ

    சென்னை: 96 பட பாதிப்பு.. அத்தனை சீக்கிரம் போகாது போல.. தொடர்ந்து குவியும் கருத்துக்களும், விமர்சனங்களும் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் திரைப்படம் என்பதையும் தாண்டி, மலரும் நினைவுகளை, மறக்க முடியாத தருணங்களை கிளறி விட்டுப் போயுள்ளது 96 என்பதை உணர்த்துகிறது.

    இதோ நமது வாசகர் வி.பசுபதி நமக்கு அனுப்பியுள்ள ஒரு அழகிய விமர்சனம்...

    Un forgettable movie 96

    சினிமா ஒரு பிம்பம்... மாயை... செயற்கை ஆனால் இந்த செயற்கை ஊடகம் அந்த இருட்டு அறைக்குள் நமக்குள் உருவாக்கும் ரசாயன மாற்றங்கள் ஒருவித மேஜிக் வித்தைதான். அந்த வித்தை தெரிந்த கலைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி 2 மணி நேரம் உங்கள் உணர்வுகளுடன் ஆலாபனை செய்யச் சொன்னால் அதுவே '96.

    அனைவரின் வாழ்விலும் இது போன்ற பக்கங்கள் இருந்திருக்கும், கனவிலோ, நிஜத்திலோ அல்லது கற்பனையினேலும் ! அதே '96-ஆம் வருடம் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனாய் இருந்து, இன்று அந்தப் பக்கங்களை அசைபோட வைக்கும் ஒரு அனுபவமாய் அமைந்தது இந்தப் படம். ஒரு ஆணின் தயக்கம், பெண்ணின் நேரடிப் பேச்சு இது இரண்டுக்கும் இடையே ஒரு காதல். இருவரை மையமாய்க் கொண்டு கவிதையாய் வந்திருக்கும் இந்தப்படத்திற்கு "இருவர்" படத்தின் கவிதை வரிகளே அருமையாய் கதை சொல்லும்.....

    "உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
    மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே" - இது கே.ராமச்சந்திரன்

    "பார்வையிலே சில நிமிடம்
    பயத்தோடு சில நிமிடம்" - இது அவன் உணர்வு .....

    "அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை"- இது S. ஜானகி தேவி.....

    "யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை" - இதுவே கதை ....
    "கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி" - இது முடிவு .....

    குறிப்பால் உணர்த்தி கதை சொல்லும் யுக்தி அழிந்து வரும் இந்த காலகட்டத்தில், படம் நெடுக பல இடங்களில் குறிப்புகளால் (metaphoric -ஆக) கதை சொல்லும் இயக்குனருக்கு பலத்த கைத்தட்டல். நீங்கள் இந்தப் படத்தை பார்க்காமல் இருந்தால் நீங்கள் பார்க்கும் பொது ரசிப்பதற்காக சில....நீங்கள் பார்த்திருந்தால் இவைகளுக்காக மீண்டும் ஒருமுறை பாருங்கள்.....

    ஆரம்பப் பாடலிலேயே கதாநாயகன் ஒரு தனி மனிதன் என்பதை உணர்த்தும் வகையிலான காட்சியமைப்பு....மேலும் அவன் car அவனது முக்கியமான #96இடம் (space) என்பதையும், அந்தப் பாடலின் முடிவில் மேல் நோக்கி கேமரா சென்று கொண்டே இருக்கும் காட்சியில் அவன் பெயரை நமக்கு பதிவு செய்வதும்.....கூடவே ஒரு விடைபெறாத இன்னோர் பெயரால் அவன் காதலையும் முதல் 5 நிமிடத்திலேயே நமக்கு உணர்த்தி இருப்பது

    22 வருட சந்திப்பிற்குப் பின் இருவரும் முதல்முறை பிரியும்போது நாயகி அவள் தங்கும் இடத்திற்குள் நுழையும் போது அவள் பின்னே ஒரு கண்ணாடிக் கதவு மூடும். பின்னர் வரும் காட்சியின் வசனம் - அவள் : "ரொம்ப தூரம் போய்ட்டாயா ?" ("என்னைவிட்டு" என்றும் அர்த்தம் செய்து கொள்ளலாம்) அவன்: "உன்னை இறக்கிவிட்ட அதே இடத்திலே நிற்கிறேன்" என்று கூற, அதே கதவுகளை அவள் தாண்டிச் செல்லும் போது நாயகன் அவன் 'car ' கதவுகளை திறந்து அவனது space -க்குள் அவளை அனுமதிப்பது கவிதை.

    நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரு 'சங்கடமான' பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் பொது, ஒரு 'காவல் தெய்வம்' கெளம்புங்க என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் கவிதை

    படம் நெடுக அவன் விருப்பத்தை அவன் கேட்காமலே இருப்பதும்....அவன் கேட்காமல் அவனுக்கு அதைத் தரமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் நாயகி, கடைசியில், ஒரு 'weak moment'-ல், அவளாய் அவன் வெகு நாட்களாய் விரும்பியதைத் தருவது, அவள் மனநிலையை மிக கண்ணியமாய் உணர்த்திடும் அற்புதமான metaphor . ஆண் - பெண் உறவின் கண்ணியங்களை இதைவிட கவிதையாய் ....காதலாய் இதுவரை கண்டதில்லை....கேட்டதில்லை.....படித்ததும் இல்லை.....

    முரண்களை மையமாகக் கொண்ட கதைகளில் விரசம் வழிந்தோடும் கதைகளை பார்த்துப் பழகிய நமக்கு, '96 ஓர் இன்ப அதிர்ச்சி. திருமணம் ஆன பெண் , 22 வருடமாய் அவளுக்காக வாழும் கன்னிப்பையன் - ஒரு சந்திப்பு - இதிலென்ன முரண் இருக்க முடியும்

    முரண் 1: பள்ளிப்பருவ காலத்தின் நினைவுகளே ராமச்சந்திரனை 22 வருடங்களை தனி மரமாய் கடக்க விட்டு இருக்கும் நிலையில், இத்தனை வருடங்களுக்குப் பின் அவனோடு, ஓர் இரவு, பேசி சிரித்து இருக்க வேண்டும் என்று கேட்க்கும் அவளின் கேள்வி அவனை மீண்டும் ஒரு நினைவுப் புள்ளியில் நிறுத்தி விடாதோ ? இல்லை, அவள் சொல்வதால் அவனுக்காக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வானா ?

    முரண் 2: மகிழ்ச்சியாய் இருக்கிறேனோ தெரியாது....நிம்மதியாய் இருக்கிறேன் என்று சொல்லலும் நாயகி. அவளுக்காக காலத்தால் உறைந்து வாழும் நாயகன். பல இடங்களில் இவர்களின் உணர்வுகளுக்கும் சமுதாய கோட்பாடுகளுக்கும் இடையே நூலிழையில் பயணிக்கும் தருணங்கள்....

    முரண் 3: சமுதாயம் என்பது நீயும், நானும் மற்ற அனைவரும் சேர்ந்த ஒன்று. இதன் கட்டமைப்புகள் நமக்கு நாமே அமைத்துக் கொண்டது. இப்படி இருக்கையில், இறுதிக்கு கட்டத்தில் குறைந்தது அவனுக்கு ஒரு முத்தத்தையேனும் கொடுத்து விட மாட்டாளோ என்று நம்மை ஆர்ப்பரிக்க வைத்துவிட்டு , 2 கதாபாத்திரங்களும் அந்த கட்டமைப்பிற்குள்ளாகவே பயணிப்பது நமக்குள் இருக்கும் முரணை உரித்துக் காட்டுகிற முயற்சி......

    காதலே காதலே
    தனிப்பெரும் துணையே
    கூட வா கூடவா?
    போதும் போதும்

    காதலே காதலே
    வாழ்வின் நீளம்
    போகலாம் போகவா நீ ...

    வி.பசுபதி

    உங்களோட உங்களோட "96" அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே! #96themovie

    English summary
    Our reader V Pasupathy's take on movie 96 and his comments on the characters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X