திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்.. ஐ.நா.வில் ஒலித்த எதிர்ப்புக் குரல்கள் !
திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழத்தமிழர்கள் ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மே மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது.
உயிரிழந்த தமிழர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கத்தினரும், தமிழ் அமைப்புகளும் சென்னை மெரினாவில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று இந்த ஆண்டும் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு போலீசார் தடை விதித்தனர். மே 21-ஆம் தேதி தடையை மீறி அஞ்சலி செலுத்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மெரினாவிற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 17 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐ.நா சபை மனித உரிமை 35-வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் ஆரம்ப உரைகள் முடிந்தவுடன், அரசியல்சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் இரண்டு முக்கிய விஷயங்கள் வைக்கப்பட்டது. அதில் முதலாவதாக காஷ்மீரில் நடக்கும் கொடூரமான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது தொடர்பாக மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக 3 உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினர். ஐ.நா.சபையில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை எழுப்பும் என தெரிகிறது.