திண்டுக்கல்லில் அறிவிக்கப்படாத மின் வெட்டு: பொது மக்கள் அவதி !
திண்டுக்கல்: கோடை காலம் வரும் பின்னே மின் வெட்டு வரும் முன்னே என்பது போல் முன் அறிவிப்பில்லாத பவர் கட் பிரச்சினையால் திண்டுக்கல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
திண்டுக்கல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டால் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இரவில் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களிலும் மின்சாரம் திடீரென்று தடைப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களில் திருட்டு பயம் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது அறிவிக்கப்படாத மின்வெட்டா அல்லது மின் விநியோகத்தில் பிரச்சினையா என்று தெரியவில்லை.வழக்கம் போல மின்வாரியம் இதுகுறித்து இதுவரை விளக்கம் தராமலேயே உள்ளது.