முடியலை.... தலைநகர் சென்னையிலும் "பவர் கட்"... உடம்புல நீர்ச்சத்து குறையாம பார்த்துக்கோங்க மக்களே!
சென்னை: சென்னையில் வெயில் ஒருபக்கம் வெந்து தணிக்கும் நிலையில், பவர் கட் பிரச்சனையும் தற்போது தீவிரமடைய ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் கொடுமையாக இருக்கும் என்று வானிலை மையங்கள் முன்னறிவிக்க ஆரம்பித்து விட்டன. இயல்பை விட அதிகமாகவே வெயில் அடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் இந்த எல் நினோதான் காரணம். தற்போது அது உண்மையாகி வருகிறது.
மார்ச் முதலே:
மார்ச் மாதமே தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று ஏப்ரல் துவங்கியுள்ள நிலையில் வெப்பத்தின் அளவு மிதமிஞ்சிய நிலையில் இருக்கின்றது.
பவர் கட்:
தமிழகத்தின் பல பகுதிகளில் மின் தடை அதிகமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இரவு பகல் என்று பாரபட்சம் பார்க்காமல் கரண்ட் கட் ஆவதாக கூறப்படுகிறது.
சென்னையில்:
இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில் அவ்வப்போது பவர் கட் ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் இன்று 2 மணி நேரத்திற்கும் மேலாக பவர்கட் பிரச்சினை இருந்தது.
புழுக்கம்:
கொளுத்தும் வெயில் ஒருபக்கம், மின்தடை மறுபக்கம் என மக்கள் சிக்கி, காற்றுக்கும் வழியில்லாமல் மக்களின் பாடு திண்டாட்டமாகவே இருந்தது.
வெப்பம்:
மேலும், குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை காலகட்டம் என்பதால், என்னதான் இன்வெர்ட்டர் போட்ட வீடுகள் என்றாலும் காற்றின் வெப்பம் குறையாததால் அவதியுற்றனர் பெற்றோர்.
உடம்பு பத்திரம்:
கொட்டும் வியர்வையில், பவர் கட்டும் இடம் பிடித்துள்ளதால் எலுமிச்சை, உப்பு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றின் கலவையை அதிகளவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம். உடலின் நீர்ச்சத்து குறைந்தால் அது உயிரிழப்பு வரை கொண்டு சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.