எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகளின் மர்ம மரணங்கள்... குமுறும் பெற்றோர்கள்... விடை தெரியாத கேள்விகள்
சென்னை: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த ரோகில் வெமுலாவின் மரணத்திற்காக வெகுண்டு எழுந்த தமிழக மாணவிகள்... சமூக ஆர்வலர்கள் யாரும் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகளின் மர்ம மரணத்திற்கு சமூக வலைத்தளங்களில் கொந்தளித்ததாக தெரியவில்லை.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் என்னும் இடத்தில் எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இயற்கை மருத்துவம் படித்த மாணவிகள் மோனிசா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மூன்று மாணவிகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கிணறு போன்ற நீர்நிலையில் கூட்டாக தற்கொலை செய்வது சாத்தியமில்லாதது என்று கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது ஒருபுறம் இருக்க மாணவிகளின் பெற்றோர்களோ தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எங்கள் மகள்கள் கோழைகள் அல்ல என்று கூறியுள்ளனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து கடந்த 22ம் தேதி கல்லூரி விடுதிக்கு சென்ற மகள் 23ம் தேதி தற்கொலை செய்து கொண்டது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார் மோனிஷாவின் தந்தை தமிழரசன். பிரியங்காவின் தாய் ஜெயந்தியோ அரசு ஒதுக்கீடு சீட் என்று சேர்த்தோம் ஆனால் என்மகளை அநியாயமாக கொலை செய்து விட்டார்களோ என்று குற்றம்சாட்டியுள்ளார். என் மகளை மிரட்டியே சாகடித்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர் சரண்யாவின் பெற்றோர்.
இந்த கல்லூரியில் ஏற்கனவே விஷம் குடித்தும், தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் மாணவிகள்.
மாணவிகளின் தற்கொலையை அடுத்து மருத்துவக்கல்லூரிக்கு சீல் வைத்ததுடன் கல்லூரியின் தாளாளர் வாசுகியின் மகன் சுவாகர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்லூரியின் அங்கீகாரம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
கல்லூரி அங்கீகாரம்
முதலாவதாக, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியலில் எஸ்விஎஸ் கல்லூரி இடம்பெற்று இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டே எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கும் நிலையில், அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்ற பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.
எம்.ஜி.ஆர் மருத்துவக்கல்லூரி லிஸ்ட்
அதாவது டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், பி.என்.ஒய்.எஸ் பட்டப்படிப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலில் எஸ்.வி.எஸ் மருத்துவ கல்லூரி இடம்பெற்றுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலிலும் எஸ்விஎஸ் கல்லூரி இடம்பெற்று இருக்கிறது தெரியவந்துள்ளது.
பெற்றோர் அதிர்ச்சி
இந்த முரண்பட்ட தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பிரச்னையை திசை திருப்ப எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. பல்கலைக்கழக இணையதளம்: http://goo.gl/CPzXJN
அங்கீகாரம் கிடைத்தது எப்படி?
எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் துவங்கப்பட்டுள்ள கல்லுாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? 2008ம் ஆண்டே அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், 7 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்விஎஸ் யோகா கல்லுாரி இயங்கியதற்கு யார் பொறுப்பு? யார் அனுமதியுடன் மாணவர் சேர்க்கை நடைபெற்றது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதே போல்,கல்லுாரியின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளுக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது பற்றி தெரியாமல் போனது ஏன்?
அதிகாரிகளுக்குத் தெரியாதா?
கல்லுாரி முறைகேடுகள் பற்றியும், கட்டணக்கொள்ளை குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மாணவியர் மனு கொடுத்தபோது, அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. எஸ்விஎஸ் யோகா கல்லூரி தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அனுப்பியதாக கூறப்படும் அறிக்கை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாணவியரின் சடலங்கள் மீட்பு
கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் மாணவியர் மீட்கப்பட்டுள்ளது பற்றி எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு காவல்துறையினர் உரிய பதில் அளிக்காதது ஏன்? மாணவியர் எழுதியதாக கூறப்படும் கடிதங்களின் உண்மைத்தன்மை பற்றி எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுந்துள்ளது. இப்படி பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கண்டால் மட்டுமே மாணவியர் தற்கொலையில் நிலவும் மர்மங்களுக்கு தீர்வு கிடைக்கும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.