தேர்தல் கூட்டணி: வழக்கம் போல் சஸ்பென்ஸ் வைத்து முடித்த "மதில்மேல் பூனை" விஜயகாந்த்
காஞ்சிபுரம்: நான் 'கிங்' என்று கூறி சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை கடைசி வரை சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து காஞ்சிபுரத்தில் நடந்த திருப்புமுனை மாநாட்டை முடித்து விட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அரசியல் திருப்புமுனை என்று ஆரம்பித்து கடைசியில், எதிர்பார்த்த மாதிரியே, எதுவுமே இல்லாமல் ''புஸ்'' என்று முடிந்துவிட்டது இந்த மாநாடு.
காஞ்சிபுரம் வேடலில் நடைபெற்ற தேமுதிக திருப்புமுனை மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அனல் பறக்க பேசி அமர்ந்தார் மகளிர் அணி தலைவி விஜயகாந்த்.
அவருக்குப் பின்னர் அமைதியாக பேச்சை ஆரம்பித்தார் விஜயகாந்த். காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மலரும் என்பது தான் மாநாட்டு தாரக மந்திரம். காஞ்சி குலுங்கி விட்டது. அடுத்து காலம் கனிவதும், ஆட்சி மலர்வதும் தான். நான் இந்த மாநாட்டிற்கு காரில் வரும்போது சாலை ஓரத்தில் அமர்ந்து தொண்டர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
எதற்காக? விஜயகாந்த் பேச்சை கேட்க வேண்டும் என்பதற்காகத்தான். இதை பார்க்கும்போது என்மனம் எங்கோ பறந்து சென்று விட்டது. அவர்கள் ஆடிக்கொண்டு வருவதைப் பார்த்து எனக்கே ஆட வேண்டும் என்று தோன்றியது. தலைவர் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை தொண்டர்கள் வழியில் தலைவன்.
எனக்கு பணம், காசு சம்பாதிக்கும் ஆசை கிடையாது. ஒரு வேளைக்கு பழைய சோறு, வெங்காயம் கொடுத்தால் போதும். என் ஒவ்வொரு தொண்டனும் எனக்கு சாப்பாடு போடுவான் என்று சென்டிமெண்ட் டச் வைத்தார் விஜயகாந்த்.
ஜெயலலிதாவிற்கு பயம்
எப்போதும் முன்கூட்டியே தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். இப்போது ஏன் வெளியிடவில்லை. எல்லாம் பயம். தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயம். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? என்று கேட்டார்.
எதிரி யார் தெரியுமா?
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார். இப்போது காஞ்சிபுரத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து அவருக்கு கண்கட்டி இருக்கும். ஆட்சியில் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விட்டதாக ஆணவத்துடன் நடந்து கொள்கிறீர்கள்.
யார் ஜீரோ
சட்டசபையில் ஒரு அமைச்சர் பேசும்போது தே.மு.தி.க.வுக்கு ஜீரோ தான் கிடைக்கும் என்றார். நான் சென்றிருந்தால் ஜீரோ நாங்களா? உங்க அம்மாவா என்று கேட்டிருப்பேன். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இடைத்தேர்தலில் நீங்கள் தோல்வியடைந்தீர்களே. போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் தோற்று போனீர்கள். கடந்த காலகட்டங்களில் 40 லோக்சபா தொகுதிகளிலும் தோற்றீர்களே. அப்போது, நீங்கள் ஜீரோ தானே.
லஞ்சம் அதிகரிப்பு
அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது. சாலைகள் எதுவும் சரியில்லை. ஆனால், சாலை பாதுகாப்பு வார விழா நடத்துகிறார்கள்.
எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குறாங்க. நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளிடம் இரண்டு கிலோவுக்கு ரூ.10 வீதம் லஞ்சம் கேட்கிறார்கள்.
குமாரசாமி கணக்கு
சரியா கணக்கு போடனும்னா குமாரசாமியிடம் தான் கேட்க வேண்டும். நாம 4+4ம் 8ன்னு கணக்கு சொன்னால் அவர் 3 என்று கணக்கு போடுவார். இதுதான் குமாரசாமி கணக்கு என்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. வாட்ஸ்அப்ல சொல்றாங்க.
ஆட்சி முடியப்போகிறது
5 ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில், குடும்பத்திற்கு 20 லிட்டர் குடிநீர் கொடுப்பதாக கூறுகிறார்கள். முன்னாடியே இத்திட்டத்தை அறிவிக்காமல், எதற்காக கடைசி நேரத்தில் அறிவித்துள்ளீர்கள். நிறைவேற்றாமல் போய்விடலாம் என்பதற்காக தானே. ஆட்சி முடியும் தருவாயில் நல்லது செய்வது போல் நாடகம் செய்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஊழல், கமிஷன்
திராணி இருந்தால் சங்கரன்கோவில் தொகுதியில் நில்லுங்கள் என்று ஜெயலலிதா சவால் விட்டார். நாங்கள் நின்றோமே. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. 8 ஆயிரம் கோடி உடன் குடி திட்ட பணிகளுக்கு 4 ஆயிரம் கோடி பணம் கமிஷன் அடிக்க திட்டமிட்டுள்ளார். ஊழல் செய்கிற கை எப்படி சும்மா இருக்க முடியும்.
அடகு வைக்க மாட்டேன்
நான் இந்த மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கலாம் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்கள். நான் தொண்டர்களை ஒருபோதும் அடகு வைக்க மாட்டேன். தொண்டர்களுக்காக நல்ல முடிவை எடுப்பேன் என்று கூறினார்
தெளிவாக சிந்திக்கிறேன்
விஜயகாந்த் சீட் அதிகம் கேட்கிறார்? அதிக ரேட் கேட்கிறார்? என்றெல்லாம் சொல்கிறார்கள். என் மக்களை நான் அடகுவைப்பதா? நான் தெளிவாக சிந்திக்கிறேன் என்றும் விஜயகாந்த் சொல்ல கூட்டத்தில் விசில் பறந்தது.
தொண்டர்கள் செய்வார்கள்
நான் என்ன சொன்னாலும் என் தொண்டர்கள் செய்வார்கள். அதற்கு விஜயகாந்த் தொண்டன் குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான் காரணம். விஜயகாந்த் ஏழை மக்களுக்காக வாழ்ந்ததாகத்தான் இருக்க வேண்டும்.
ஊடகங்கள் ஜால்ரா
சட்டசபையில் ஜெயலலிதா எது பேசினாலும், டேபிளை தட்டுகின்றனர். எதற்கு தட்டுகிறோம் என்று தெரியாமலேயே சிலர் தட்டுகின்றனர்.
அதேபோல ஜெயலலிதாவிற்கு சில ஊடகங்கள் ஜால்ரா அடிப்பதாக கூறிய விஜயகாந்த், ஜெயலலிதா நின்றால், நடந்தால் கூட சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றனர் என்றார். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் கேப்டன் டிவி கூட எங்களுக்கு ஆதரவு தர வேண்டாம் என்று கூறிவிடுவேன். ஊடகங்கள் நேர்மையாக செய்தி வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நடிக்கத் தெரியாது
எனக்கு சினிமாவில் மட்டுமே மேக்கப் போட்டு நடிக்கத் தெரியும். நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாது. ஏமாற்றத் தெரியாது. கூட்டணிக்குப் போகக் கூடாது என்று நீங்களே சொல்கிறீர்கள். விருப்ப மனு நேர்காணல் திங்கட்கிழமை நடக்கிறது. அப்போது மனு செய்த தொண்டர்களிடம் நான் கூட்டணி குறித்து கேட்பேன்.
மாவட்டச் செயலாளர்களுடன் பேசி, எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன்.
நான் 'கிங்' தான்
விஜயகாந்த் கூட்டணியில் சேருவாரா? என்று கேட்கிறார்கள். நான் கிங் மேக்கரா இருக்கணுமா? கிங் ஆக இருக்கணுமா? என்று தொண்டர்களாகிய நீங்களே சொல்லுங்கள் என்றார். தொண்டர்கள் கிங் என்று சொல்ல, உடனே நான் கிங் ஆக இருக்கவேண்டும் என்று தொண்டர்களே சொல்லிவிட்டீர்கள். நான் கிங் ஆக இருந்தால் தொண்டர்களும் கிங் ஆக இருப்பார்கள். அனைவரும் பத்திரமாக வீடு போய் சேருங்கள்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் விஜயகாந்த்.