அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு.. மர்மநபர்கள் கைவரிசை.. போலீஸ் விசாரணை!
நாகர்கோவில், நெய்வேலி, வந்தவாசியில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
நாகர்கோவில்: நாகர்கோவில், நெய்வேலி மற்றும் வந்தவாசியில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடி சேதம் அடைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி நாளை பஸ் ஸ்டிரைக் தொடங்கும் என்று அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்த நிலையில் திடீரென இன்று மதியமே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை துவங்கி விட்டன.
சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கரூர் பல இடங்களில், பேருந்துகளை போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்ப் பேருந்துகளை முழுமையாக நிறுத்தியுள்ளனர்.
பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. வன்முறை, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் போக்குவரத்து பணிமனை அருகே, வந்தவாசியிலிருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பேருந்தின் கண்ணாடி சேதம் அடைந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பேருந்து மீது கற்கள் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் நாகர்கோவில் அருகே செட்டிகுளத்தில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் நெய்வேலி ஸ்டார் ரோடு பகுதியில் வந்த தமிழக அரசு பேருந்து மீது கல்வீசப்பட்டது. பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.