நீலகிரியில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து : மூன்று தொழிலாளர்கள் படுகாயம்
நீலகிரியில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஊழியர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரன்ஸி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் . இவர் அந்த பகுதியில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல அந்த தொழிற்சாலையில் உரிமையாளர் கனகராஜ் மற்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பிரகாஷ், வேலு, ரஞ்சித் ஆகியோர் தைலம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தைல தயாரிப்பிற்காக தொழிற்சாலையின் அருகே குவித்து வைக்கப்பட்டு இருந்த காய்ந்த தைல மர இலைகளில் திடீரென தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென தொழிற்சாலைக்குள் பரவியது.
தீ வேகமாக பரவுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பிரகாஷ், வேலு, ரஞ்சித் ஆகியோர் தீயில் இருந்து தப்பி வெளியே ஓடினர். அப்போது தீயில் சிக்கி அவர்கள் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் தொழிற்சாலையின் கிடங்கில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த நீலகிரி தைலம், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தேயிலை தூள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் என மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்தில் காயம் அடைந்த பிரகாஷ், வேலு, ரஞ்சித் ஆகியோரை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.