கொஞ்சி விளையாடிய தமிழ்.. நின்று களமாடிய சிங்கம்.. மறக்க முடியுமா.. சிவாஜியை?
சென்னை: பராசக்தி தொடங்கி பல நூறு படங்களில் பாயும் புலியாக மாறி தமிழ் மறவனாக தமிழ் உலகை தனது தீந்தமிழ் வசனங்களால் திகுதிகுவென பீடித்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் மண் உலகை விட்டு வான் உலகை பீடித்த தினம் இன்று.
சிவாஜி என்றால் வசனம்.. வசனம் என்றால் சிவாஜி என்று புதுச் சரித்திரம் படைத்த விழுப்புரம் சின்னையா கணேசன்.. சிவாஜி கணேசனாக தமிழ்த் திரையலகை நீ்ண்ட நெடுங்காலம் ஆட்டிப்படைத்தார்.
அ முதல் ஃ வரை தமிழின் ஒவ்வொரு எழுத்தும் இந்த சிம்மக் குரலோனின் வாய் முழக்கத்தில் சிக்கி சுகம் கண்டு கிடந்த காலம் அது.
வசனமே பேசாமல் முக பாவனைகளால் பல ஆயிரம் மொழி பேசிய இந்த சிம்மக் குரலோனுக்கு பெரிய வசனம் எல்லாம் பெரீஸ் மிட்டாய் சாப்பிடுவது போல.. பாருங்கள் எப்படிப் பேசுகிறார் இந்தப் படத்தில்...
ஆஹாவென வாய் பிளக்க வைத்த தமிழ் சொல்லாடல் இந்த திருவிளையாடல்.. நாகேஷ் நடிப்பு பெரிதா.. கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த நடிகர் திலகத்தின் வசன வீச்சு பெரிதா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.. தமிழ் கூறும் நல்லுலகம் இன்று வரை ரசித்து ருசித்துப் பார்க்கும் அந்த அழகான வசன விளையாடல்..
சின்னப் பொடுசு முதல் அந்தக் கால பெருசு முதல் வாழ்க்கையில் தலா ஒரு முறையாவது இந்த வசனத்தைப் பேச முயற்சித்திருப்பார்கள். டப்ஸ்மாஷ் வருவதற்கு முன்பு ஒவ்வொருவரின் வாயிலும் வந்து போன மறக்க முடியாத வசன வீச்சு இது...
இப்படி ஒரு வசன விறுவிறுப்பு ஒரு புதுமுக நடிகன் முதல் படத்திலேயே கொடுப்பான் என்று எந்த ஒரு திரை ரசிகனும் அப்போது நினைத்துப் பார்த்திருக்கவில்லை.. வசனம் எழுதிய கலைஞருக்குப் பெருமையா.. அல்லது அதை உயிரோட்டத்துடன் உச்சரித்து உயிரூட்டிய சிவாஜி கணேசனுக்குப் பெருமையா.. தொடர்கிறது வாதப் பிரதிவாதங்கள்
சிவாஜியின் நடிப்பும், பேச்சும் ஓவர் ஆக்டிங்.. ரொம்பப் பேசுகிறார் என்றெல்லாம் கூட விமர்சனம் வந்தபோது இந்தப் படம் அப்படியே அவரைப் பார்த்து விமர்சகர்கள் அத்தனை பேரையும் கை தட்ட வைத்தது. இந்தக் காட்சி சிவாஜியின் இன்னொரு ரூபத்தை நமக்குக் காட்டி ஆச்சரியப்படுத்தியது...
கமல்ஹாசனிடம் போய்ட்டு வர்றேன்னு சொல்லுங்க என்று கூறிய இந்த வசனத் திலகம்.. நம்மிடம் சொல்லாமலேயே போய் விட்டார்... மறக்க முடியுமா.. நடிகர் திலகத்தை?