"மக்களால் நான்.. மக்களுக்காக நான்"... இனி இக்குரலை எப்போதும் கேட்க முடியாது.. பிளாஷ்பேக் 2016!
2016ம் ஆண்டு மறக்க முடியாத ஒரு குரல் ஜெயலலிதாவின் மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று அவர் சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததுதான்.
சென்னை: 2016ம் ஆண்டின் நினைவுகளை திரும்பிப் பார்க்கும்போது மனம் கனக்க வைக்கும் எத்தனையோ நிகழ்வுகள் நம்மை வாட்டி விட்டுச் செல்கின்றன. அதில் ஒன்று ஜெயலலிதாவின் குரல்.
திமுக தலைவர் கருணாநிதி போல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போல, நாஞ்சில் சம்பத் போல மடை திறந்த வெள்ளமாக பேசக் கூடியவர் அல்ல ஜெயலலிதா. தனது குருவும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் போலத்தான் இவரும் ஒரு சாதாரண பேச்சாளர்.
ஆனால் பேச்சில் தனக்கென ஒரு தனி பாணியைக் கடைப்பிடித்தவர் ஜெயலலிதா. மக்களின் மனதில் தங்கும் அளவுக்கு தனது பேச்சில் சில சாதுரியங்களை வார்த்துக் கொண்டவர்.
செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா
2014 சட்டசபைத் தேர்தலில் அவர் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா என்று கேட்டு பிரசாரம் செய்தது பெரும் ஹிட் ஆனது. இதை வைத்து பலரும் பிரபலமாக்கினர்.
எதிர்க்கட்சியினரும் காப்பி அடித்தனர்
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் இந்த வாசகத்தை வைத்து எதிர்க்கட்சியினரும் எதிர்ப் பிரச்சாரம் செய்தனர். காரணம், அது மக்களிடையே பாப்புலராக இருந்ததால்.
போகும் இடமெல்லாம் செய்வீர்களா
பிரசாரத்திற்காகப் போன இடமெல்லாம் தனது பேச்சின் இடையேயும், நிறைவாகவும் இந்தக் கேள்வியைக் கேட்கத் தவறவில்லை ஜெயலலிதா. அந்தக் கேள்விக்கு மக்களிடமிருந்து அப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல அவல்
அதை விட இந்த வாசகம் எதிர்க்கட்சியினர் மத்தியிலும் பிரபலமாகி விட்டதுதான் சுவாரஸ்யமானது. மு.க.ஸ்டாலின் இந்த வாசகத்தையே எதிர்ப் பிரச்சாரமாக பயன்படுத்தி தனது கூட்டங்களில் செய்தீங்களா நீங்க செய்தீங்களா என்று கேள்வி கேட்டார். விஜயகாந்ததும் இதை இமிடேட் செய்து கிண்டலடித்தார்.
மக்களைக் கவர்ந்த செய்வீர்களா
அதிமுகவினர் எதிர்பார்த்தது போல இந்த வாசகம் அனைத்து மக்களையும் சென்றடைந்தது. எப்படி கருணாநிதிக்கு என் அருமை உடன் பிறப்புகளே என்ற வாசகம் காலாகாலத்திற்கும் அவர் பெயர் சொல்லுமோ அதேபோல ஜெயலலிதாவை நினைவு கூர இந்த வாசகம் உதவும்.
மக்களால் நான் மக்களுக்காக நான்
அதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் பேசிய மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகம் வெகு பிரபலமானது. எனக்கென்று பிள்ளை குட்டி இல்லை. நான் மக்களுக்கு சொந்தம், மக்கள்தான் என் சொந்தம் என்று கூறி அவர் பேசியது மக்களை உருக வைத்தது.
இனி கேட்க முடியாது
ஜெயலலிதாவின் வாயிலிருந்து புறப்பட்டு வந்த இந்த செய்வீர்களா என்ற வாசகத்தையும் சரி, மக்களால் நான் வாசகத்தையும் சரி இனி கேட்க முடியாது என்ற சோகத்தில் அதிமுகவினர் உள்ளனர். ஜெயலலிதாவின் பிரசாரப் பேச்சிலிருந்து ஒரு வீடியோ உங்களுக்காக...