மதுரை காமராஜர் பல்கலை. விருந்தினர் மாளிகைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் பணியில் இருந்த ஊழியரைக் கட்டிப்போட்டு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்தனர். இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைகழக வளாகத்தில் விருந்தினர் மாளிகை உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது இங்கு தங்குவது வழக்கம். விருந்தினர் மாளிகையில் மூன்று ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களை முன்னிட்டு பல்கலைக்கழகத்துக்கு ஜன.4 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் விடுதிகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் நேற்று காலை விருந்தினர் மாளிகைக்கு இரண்டு இளைஞர்கள் வந்து பணியில் இருந்த ஊழியர் மாணிக்க வேலுவிடம் அறைகளை பார்க்க வேண்டும் என்று கூறினர். அவரும் அந்த இளைஞர்களை அழைத்துச் சென்று அறைகளை திறந்து காட்டியுள்ளார்.
அப்போது திடீரென அவரை அடித்து உதைத்து, அவரது செல் பேசியையும் பறித்துக் கொண்டு அவரை அந்த அறையிலேயே வைத்துப் பூட்டினர். பின்னர் விருந்தினர் மாளிகைக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து மாணிக்க வேலுவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பிளம்பர் சந்திரன் கதவை உடைத்து மாணிக்க வேலுவை மீட்டுள்ளார்.
இதில், விருந்தினர் மாளிகையின் வரவேற்பறை, சமையல் அறை, உணவறை ஆகியவற்றில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது. அதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த நாகமலைப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.