கிருஷ்ணகிரி அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை
கிருஷ்ணகிரி அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பண்ணந்தூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் சமையலறை வழியாக இறங்கி பீரோவில் இருந்த பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள இந்திரா நகர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் முருகன் என்பவர் வசித்து வருகிறார்.
இவர் பெங்களூரில் கட்டுமான நிறுவனமொன்றில் காண்ட்ராக்ட் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் நடந்த திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு வந்து விட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லையென அறிந்த மர்ம நபர்கள் வீட்டை ஒட்டியுள்ள பாத்ரூம் வழியாக மேலே ஏறி சமையல் அறையின் வழியாக வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
பிறகு பீரோவில் இருந்த 11 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி கொலுசுகள், பணம் 90 ஆயிரம் ரூபாய் மற்றும் வீட்டின் முக்கிய ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து பாரூர் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.