மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழக அரசு பின்பற்றாததே பருப்பு விலை உயர்வுக்கு காரணம்: தமிழிசை
சென்னை: மத்திய அரசு கொடுத்த ஆலோசனைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை. இதனால்தான் இங்கு பருப்பு விலை உயர்வு அதிகமாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் சமத்துவ மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளர் நிரஞ்சன்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்.
அப்போது தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்து பணிகளையும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் பாஜகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இன்று முதல் பணிகளை தொடங்கியுள்ளனர். விரைவில் கட்சியின் தொகுதி மாநாடு நடத்தப்படும். இதில் பங்கேற்க முக்கிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். பீகார் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகத்தில் தான் பருப்பு விலை அதிகம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு முன் கூட்டியே அறிவித்தும் மாநில அரசு அந்த ஆலோசனைகளை சரியாக பின்பற்றவில்லை. அதனால் தான் தமிழகத்தில் பருப்பு விலை மிக அதிகம் உயர்ந்து விட்டது.
பருப்பு பதுக்கலை தடுக்குமாறு மத்திய அரசு முன்பே எச்சரித்தும் பதுக்கலை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. ஒரு கிலோ துவரம் பருப்பை ரூ.110-க்கு தருவதாக தமிழக அரசு சொல்வது ஒரு கண் துடைப்பாகும். இந்தியா முழுவதும் மலிவு விலையில் பருப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உணவு பொருள் வாணிப கழகத்தில் இருந்து மத்திய அரசு உணவு பொருட்களை ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கிறது.
அந்த பொருட்களை உடனடியாக ரயிலில் இருந்து எடுத்துச் செல்லாததால் தமிழக அரசு தினமும் அதற்கு ரூ.1 கோடி வாடகையாக செலுத்தி வருகிறது. கடந்த மாதம் ரூ.30 கோடியை ரயில்வே துறைக்கு தமிழக அரசு வழங்கி இருக்கிறது.
பருப்பு தட்டுப்பாடு ஏற்படும் என மத்திய அரசு கடந்த 22-ந்தேதியே அனைத்து மாநிலத்திற்கும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.