1 மணிநேர பயணத்திற்கு ரூ.2500 கட்டணம்தான்.. புதிய விமான போக்குவரத்து கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி
சென்னை: நீண்ட காலமாக நிலுவையில் இருந்த புதிய விமான போக்குவரத்து கொள்கைகைக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
விமான பயண கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய விமானப் போக்குவரத்து கொள்கைகளை மத்திய அரசு தயாரித்து வந்தது. 2014 நவம்பரில் மோடி அரசு புதிய வரைவு திட்டத்தை வெளியிட்டது. பின்னர், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தும், பல்வேறு கட்ட கலந்தாய்விற்கு பிறகும் அந்த கொள்கையில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு 2015 அக்டோபரில் புதிய வரைவு வெளியிடப்பட்டது.
இருப்பினும் அமைச்சரவை ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த புதிய விமான போக்குவரத்து கொள்கைகைக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதிய விமான போக்குவரத்து கொள்கையால் உள்நாட்டு விமான போக்குவரத்திற்கான கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. புதிய போக்குவரத்து கொள்கையில், ஒரு மணி நேர விமான பயணத்திற்கு ரூ.2500 கட்டணம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அந்த கொள்கைக்குதான் அமைச்சரவை தற்போது, ஒப்புதல் வழங்கியுள்ளதால், இனி விமான கட்டணம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு விமான சேவையில், 2022ம் ஆண்டிற்குள் 30 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுக்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் விமான போக்குவரத்தில் 9வது இடத்தில் இந்தியா உள்ளது.
"2022ம் ஆண்டுக்குள் விமான போக்குவரத்து துறையில் இந்தியாவை 3வது இடத்துக்கு முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
New #CivilAviationPolicy #Infographics pic.twitter.com/nweZyBQV3m
— Oneindia Tamil (@thatsTamil) June 16, 2016
அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலா மேம்பாடு, எல்லா பிராந்தியத்திற்கும் விமான சேவை விரிவாக்கம், குறைவான கட்டணம் ஆகியவையே புதிய சிவில் விமான கொள்கை நோக்கம் என்றும் அவர் மற்றொரு டிவிட்டில் தெரிவித்துள்ளார்.