ஹைகோர்ட் வழக்காடு மொழி: ஹிந்திக்கு ஒரு நியாயம், தமிழுக்கு ஒரு நியாயமா? மத்திய அரசின் மற்றொரு துரோகம்
சென்னை: ஹிந்தி வழக்குமாடும் மொழியாக 4 மாநில உயர்நீதிமன்றங்கள் இருக்கும்போது தமிழை, தமிழகத்தின் ஹைகோர்ட்டில் வழக்காடு மொழியாக பயன்படுத்த மத்திய அரசு குறுக்கே நிற்பது ஏன் என்ற கேள்வி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் தமிழை வழக்காடு மொழியாக ஏற்காத காரணத்தால் இதற்கு வாய்ப்பு இல்லை என்று கைவிரித்துள்ளார் அமைச்சர்.
நான்கு மாநிலங்கள்
ஆனால், அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு வசதியாக மறந்துவிட்டது. நான்கு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு ஹிந்தி வழக்காடும் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிப்பதில் என்ன சிக்கல் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டியது கட்டாயம்.
உச்சநீதிமன்ற ஆலோசனை தேவையில்லை
உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக சம்பந்தப்பட்ட மாநில மொழியை அறிவிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை கேட்கத் தேவையில்லை; மத்திய அரசே முடிவெடுத்து குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கலாம் என்று சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக இருந்த சுதர்சன நாச்சியப்பன் 2015ம் ஆண்டில் அறிவித்தார். ஆனால் தமிழை ஹைகோர்ட்டில் ஆட்சிமொழியாக்க விருப்பம் இல்லாத மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை கை காட்டி தப்பிக்கிறது.
காவிரிக்கு வேறு மாதிரி பேசினீர்களே
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, இதில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வீராவேசம் காட்டிய அதே அரசுதான், இப்போது, தமிழை வழக்காடு மொழியாக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்டதாம், நீதிமன்றம் மறுத்ததால், தமிழை புறக்கணித்ததாம். இரு மாநில பிரச்சினையிலேயே நீதிமன்றம் தலையிட கூடாது என கூறிய மத்திய அரசு, மாநிலத்திற்குள், ஒரு நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக அதே மாநில மொழியை அறிவிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கேட்டது என்பதே, அதன் உள்நோக்கத்தை தெளிவாக காண்பிப்பதாக உள்ளது.
கருணாநிதி நிறைவேற்றிய தீர்மானம்
தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி சட்டசபையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றினார். தமிழ் வழக்காடும் மொழியாக அறிவிக்கப்பட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை மொழியாக்கம் செய்ய மொழி பெயர்ப்பாளர்கள், குறிப்பெடுக்க தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தாளர்கள் நியமிக்கப்படுவார்கள். உயர் நீதிமன்ற கணினிகளில் தமிழ் மென்பொருள் வசதி ஏற்படுத்தப்படும். தீர்ப்புத் திரட்டு என்ற பெயரில் வெளியாகும் தமிழ் இதழில் குறைந்த எண்ணிக்கையிலேயே தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையை மாற்றி, அதிக எண்ணிக்கையிலான தீர்ப்புகளை முழுமையான மொழிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் சட்ட புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட நூலகம் அமைத்துத் தரப்படும். அந்த நூலகத்திற்கு சட்ட மொழிபெயர்ப்புகள் மற்றும் சொல்லகராதிகள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தரப்படும் என தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கருணாநிதி உறுதியளித்தார்.
ஹிந்தியாவாக மாற்றப்படும் இந்தியா
ஆனால், தமிழை ஆட்சிமொழியாக்க அப்போது முதல் இப்போது வரை மத்திய அரசுகள் முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. இந்தியாவை 'ஹிந்தியா' என மாற்றுவதில் காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு 8 அடி பாய்ந்தால்,, பாஜக தலைமையிலான இப்போதைய மத்திய அரசு 16 அடி பாய்ந்து வருகிறது. அதை மீண்டும் நிருபித்துள்ளது இந்த சம்பவம். மாநில சுயாட்சி, மாநில மொழி உரிமை அனைத்தையும் பறித்துவிட்டு ஒரே குடை என்ற போர்வையில் ஹிந்தியை திணிப்பதே மத்திய அரசின் வேலையாக உள்ளது. நேற்றைய பட்ஜெட் உரை முதல்கொண்டு, ஹைகோர்ட்டில் வழக்காடு மொழி என்பது வரை இதே கள்கையை கடைபிடிக்கிறது மத்திய அரசு.