ஜில் ஜில் கொடைக்கானலில் விரைவில் ஹெலிகாப்டர் தளம்...சுற்றுலாத்துறை அமைச்சர் உறுதி!
கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் விரைவில் அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
கொடைக்கானல் : கொடைக்கானலில் விரைவில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் தலங்களுக்கு உள்நாட்டு பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்திலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இரண்டாமிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் கொடைக்கானல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமேஸ்வரம், மதுரை மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் இஸ்ரேல், கனடா, மலேசியா, அமெரிக்கா, சுவீடன், தென்கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுரையில் இருந்து பஸ், கார் மற்றும் ரயில் மூலமே தமிழகத்தின் மற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஏற்படும் இந்த சிரமத்தை தவிர்க்கவும், அவர்களின் வருகையை அதிகரிக்கவும் மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். மேலும் கொடைக்கானல் - மூணாறு சாலை இணைப்புப் பணி குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.