மாயமான விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்த உத்தரவு.. அதிகாரிகளுடன் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை..
சென்னை : மாயமான டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் முழு வீச்சில் ஈடுபட கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...
கடலோர பாதுகாப்பு படை விமானம் கடந்த மாதம் நடந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மாயமான விமானத்தில் பயணித்த அதிகாரிகளின் நிலை குறித்தும், மாயமான விமானத்தை மீட்கும் முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கடலோர பாதுகாப்பு படை ஐ.ஜி. சத்யபிரகாஷ் சர்மா மற்றும் அதிகாரிகள் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சென்னையில் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளிடம், மீட்பு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர், கடலோர பாதுகாப்பு படையினர் முழு வீச்சில் தேடும் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.