ஜெயலலிதாவுக்கு வரிசை கட்டி வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள்! ரஜினியும் வாழ்த்து!!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்தும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகாலம் நீடித்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் ரோசையா, நடிகர் ரஜினி வாழ்த்து
இதேபோல் தமிழக ஆளுநர் ரோசையாவும் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்தும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.