மாணவர் மீது தாக்குதல்: சென்னைப் பல்கலை மாணவர்களின் போராட்டம் தீவிரம்- ஜன. 3 வரை விடுமுறை
சென்னை: மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து விடுதி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவே பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 3ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசியப் பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநில தேர்தல் ஆணையச் செயலர் ஜோதி நிர்மலா பேசிக் கொண்டிருந்தபோது, பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்து வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் மாணவரான ஜோனஸ் ஆண்டன் புலேந்திரராசா எழுந்து கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக எழுந்து வந்த சில பேராசிரியர்கள், அந்த மாணவரை அரங்குக்கு வெளியே இழுத்துச் சென்றனர். அவர் தாக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் 20 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்கலைக்கழக வகுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்தால், சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில், மாணவரைத் தாக்கிய போராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவரை தாக்கிய பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாணவர்கள் போராட்டத்தை அறிந்து அங்கு வந்த போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கைதாகி விடுதலை
மாணவர்கள் அனைவரையும் கைது செய்து, சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சமூகநலக் கூடத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 3ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை கண்டித்து, சென்னை பல்கலைகழக விடுதி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து, விடுமுறை விடப்பட்டாலும், மீண்டும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகம் மறுப்பு
சென்னை பல்கலைகழகத்தில் மாணவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் உண்மையில்லை என சென்னை பல்கலைகழகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைகழக பதிவாளர் டேவிடர் ஜவஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டி-சர்ட் அரைக்கால் சட்டையுடன் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர் ஆண்டன் புலந்தரராசா ஜோனஸ், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜோதி நிர்மலா சாமி தனது உரையை முடிப்பதற்குள், தேவையற்ற வினாக்களை எழுப்பி, தொடர்ந்து கூச்சலிட்டதால், அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
கதவு உடைப்பு
கருத்தரங்கிற்கு பின்னர், அந்த மாணவர் ஏராளமான வெளி நபர்களுடன் துணைவேந்தரின் அறைக்குள், கதவை உடைத்துக் கொண்டு அத்துமீறி நுழைய முயன்ற சம்பவங்கள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாயிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மாணவர் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்றும், அந்த மாணவரும், இதுவரை பல்கலைகழகத்தில் முறையாக புகார் தெரிவிக்கவில்லை என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், பல்கலைகழக மூத்த பணியாளர் கலைமணி என்பவர், மாணவர்கள் என்று கூறப்படும் நபர்களால் தாக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பதிவாளர் கூறியுள்ளார்.
ஜனவரி 3 வரை விடுமுறை
மேலும், மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு டிசம்பர் 22ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, டிசம்பர் 23 முதல் ஜனவரி 3ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு வழக்கமாக விடுமுறை அறிவிக்கப்படும். எனவே, பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ஜனவரி 4ம் தேதிதான் தொடங்கும் என்றார் அவர்.