ஹெட் கான்ஸ்டபிளிடமே 10,000 ரூபாயை ஆட்டையைப் போட்ட “ஆபீசர்”!
கோவை: கோவையில் வங்கியிலிருந்து பேசுவதுபோல நடித்து தலைமைக்காவலரின் கணக்கிலிருந்து பத்தாயிரம் சுருட்டிய நபருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.
கோவை வெரைட்டிஹால் ரோடு காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமைக்காவலர் சுப்பிரமணியம் என்பவரிடம், தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி அதிகாரி என்று அறிமுகம் செய்துள்ளார்.
உங்கள் பெயர் சுப்ரமணியம் தானே... "நீங்கள் போலீஸ் வேலைதானே செய்கிறீர்கள் என்று கேட்டவர், உங்கள் ஏ.டி.எம் கார்ட் தொடர்பான விவரங்களை பெற்று வருவதாகவும், முழு விவரங்களை கூறுங்கள்" என்று அந்த ஆசாமி கேட்டுள்ளார்.
இதனால், வங்கி அதிகாரிதான் பேசுவதாக கருதிய தலைமைக்காவலர் சுப்பிரமணியம், ஏ.டி.எம் கார்டுக்குரிய இரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் போனில் பேசிய நபரிடம் கூறியுள்ளார்.
அடுத்த சில மணிநேரங்களில், அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்தது. ஆன்லைன் மூலம் ரூபாய் 10 ஆயிரத்துக்கு செல்போன் ரீசார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 10 ஆயிரம் கழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஏட்டு சுப்பிரமணியம் கோவை சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோலவே, கோவையை சேர்ந்த 50க்கும் மேலானவர்கள் இதுபோன்று பணத்தை இழந்துள்ளதாக "சைபர்" குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து வருகிறார்கள்.