கோவை மருத்துவமனையில் 25 பவுன் நகை திருட்டு- மருத்துவர் என்ற பெயரில் மர்மநபர் கைவரிசை
கோவை: கோவை மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் என்ற பெயரில் பெண்ணிடம் 25 பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் நகைக் கடை நடத்தி வருபவர் கந்தசாமி. இவருடைய மனைவி லதா குடல் இறக்க நோயின் தாக்கத்தால் கோவை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தனி அறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லதாவினை சந்திக்க மருத்துவர் என்ற பெயரில் மதியம் 1.30 மணியளவில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் கந்தசாமியை வெளியில் இருக்க சொல்லிவிட்டு, லதாவிடம் கழுத்தில் ஊசி போடப்போவதால் சங்கிலியை கழட்டி வைத்துக் கொள்ள சொல்லியுள்ளார்.
மருத்துவர் சொல்கின்றாரே என்று லதாவும் 25 பவுன் சங்கிலியைக் கழட்டி தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டுள்ளார். ஊசி போட்டுவிட்டு அந்நபர் சென்றபின்பு பார்த்தால் சங்கிலியைக் காணவில்லை.
உடனடியாக இதனை அறிந்த கந்தசாமி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கூறிய போதுதான் அந்நபர் மருத்துவரே இல்லை என்பதும், அப்படி ஒருவர் மருத்துவமனையில் பணியில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பீளமேடு போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவமனை சிசிடிவி கேமராவில் இருந்து அந்நபர் கண்டறியப்பட்டார்.
மேலும், அந்நபர் பல்வேறு பிரபல மருத்துவமனைகளில் தன்னுடைய கைவரிசையைக் காட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் காவல்நிலையங்களில் அந்நபரின் பேரில் 7 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனடிப்படையில் புகார் பதிவு செய்து அந்நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.