உண்ணாமலைக் கடையில் மூடப்பட்ட மதுக் கடை.. வேறு இடத்தில் திறப்பு.. போலீஸ் பாதுகாப்புடன்
மார்த்தாண்டம்: காந்தியவாதி சசிபெருமாள் மறைவைத் தொடர்ந்து உண்ணாமலைக் கடையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் திறந்துள்ளனர் அதிகாரிகள். முன்னதாக இந்த திறப்பைக் கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தி விட்டு கடையைத் திறந்துள்ளனர் போலீஸார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது உண்ணாமலைக் கடை. அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தனர். இவர்களுக்காக சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். இந்தப் போராட்டத்தின்போதுதான் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மக்கள் ஆவேசத்திலிருந்து தப்பிக்க உண்ணாமலைக்கடை மதுக் கடை மூடப்பட்டது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில் அங்கு மூடப்பட்ட மதுக் கடையை தற்போது வாகவிளை பகுதிக்கு மாற்றியுள்ளனர் அதிகாரிகள். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த கடையைத் திறந்துள்ளனர். இதுகுறித்துத் தகவல் கிடைத்து விரைந்து வந்து போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்டோர் கடையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களிடம் போலீஸார் சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அனைவரையும் கைது செய்து அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் கடைக்குத் தேவையான மது பாட்டில்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு கடையைத் திறந்து விட்டனர் அதிகாரிகளும், போலீஸாரும்.
சசிபெருமாள் மறைவைத் தொடர்ந்து மூடப்பட்ட கடையை வேறு இடத்தில் திறந்துள்ள அதிகாரிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.