காவிரி: சென்னை மெரினாவில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு விதிக்க 6 வார காலக்கெடு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முடிவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு யோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டதாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இளைஞர்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழக இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று திரண்டு போராட்டம் நடத்தினர். அந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கிளர்ச்சி
கடந்த 2017-ஆம் ஆண்டு மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக புரட்சி போராட்டம் வெடித்தது. அங்கு லட்சக்கணக்கானோர் 8 நாட்களாக போராட்டம் நடத்தினர்.கடைசி நேரத்தில் சமூகவிரோத கும்பல் ஒன்று மாணவர்கள் போர்வையில் நுழைந்து அங்கு பெரும் வன்முறையை நடத்தினர்.
போராட்டத்தை தடுக்க
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று மெரினாவில் போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து மெரினா மற்றும் சுற்றுவட்டாரத்தில் போலீஸ் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரை முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
யாருக்கும் அனுமதி இல்லை
மெரினாவில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் மெரினாவுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மெரினா செல்லும் சாலை மூடப்பட்டுவிட்டது. மேலும் சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி சென்றவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.