தலித் மக்கள் நீர் எடுக்க தடை.. கிணற்றில் விஷத்தை கலந்த அநியாயம்.. கர்நாடகத்தில் சாதி வெறி!
கர்நாடகாவில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் இருந்து நீர் எடுப்பதை தடுப்பதற்பாக நீரில் உயர்சாதியை சேர்ந்த ஒருவர் என்டோசல்பான் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குல்பர்கா : கர்நாடகாவின் வடக்கு பகுதியில் உள்ள ஊர் பொதுக்கிணற்றில் இருந்து தலித் மக்கள் எடுப்பதை தடுக்க நீரில் விஷத்தை கலந்து அட்டூழியம் செய்துள்ளனர் உயர்சாதியினர்.
பெங்களூருவில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தலித்துகள் அதிக அளவில் வசிக்கும் சன்னூர் கிராமம். கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் ஜீவர்கி தாலுகாவின் கீழ் வரும் இந்த கிராமத்து மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் அந்த ஊர் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தக் கூடாது என்று உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் கிணற்று நீரில் என்டோசல்பான் என்று சொல்லப்படும் விஷத்தை நீரில் கலந்துவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கிராமத்தில் சுமார் 200 மீட்டரில் அமைந்துள்ள கிணறு மட்டுமே இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான ஒரே குடிநீர் ஆதாரம். ஊரின் மற்ற 7 கிணறுகளை உயர் சாதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தலித் ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இந்த கிணறு அமைந்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலத்தை உயர் சாதியை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.
தலித் மக்களுக்கான நீராதாரம்
இதனால் நிலத்தை குத்தகைக்கு எடுத்த கொல்லலப்பகௌடாதலித் மக்களை இந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. கிணற்றில் இருந்து பம்ப்செட் அமைக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் நீர் தலித் காலணி மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 31ம் தேதியன்று மகந்தப்பா என்ற தலித் இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாததால் தண்ணீர் விநியோகம் இல்லாததால் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றள்ளார். ஆனால் குடிநீரில் வித்தியாசமான வாடை வீசியதால் குடியிருப்புவாசிகள் இந்த நீரை அருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நீரில் என்டோசல்பான் கலப்பு
இது குறித்து குல்பர்கா டிஎஸ்பி ஹல்லூர் பார்வையிட்டு கூறிய போது நீரில் என்டோசல்பான் கலக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதனையடுத்து கடந்த 3 நாட்களில் இரண்டு முறை கிணற்று நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜீவர்கி தாசில்தார் எல்லப்ப சுபேதார் டேங்கர்கள் மூலம் நீரை விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
தொடரும் தீண்டாமைக் கொடுமை
ஊரில் உள்ள மற்ற கிணறுகளில் நீர் எடுக்க உயர்சாதியினர் மறுக்கின்றனர். இந்த கிராமத்தில் இன்னும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக அந்தப் பகுதியை சேர்ந்த தலித் தலைவர் மல்லன்ன கொடச்சி கூறியுள்ளார். தலித்கள் மீதான சாதிய கொடுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கிணற்றை குத்தகைக்கு எடுத்தவர் மீது புகார் கொடுத்தவரை சிறைக்கு அனுப்பிவிடுவேன், கொன்றுவிடுவேன் என்று அவர் மிரட்டல் விடுத்ததாகவும் மல்லன்னா கூறியுள்ளார்.
முதல்வர் பதிலளிக்க வேண்டும்
கொல்லலப்பா கௌடா இதே போன்ற பல முறை இறந்த நாய், பூனை, பாம்பு உள்ளிட்டவற்றை கிணற்றில் வீசி மக்கள் அந்த நீரை பயன்படத்த முடியாமல் செய்துள்ளார். அவற்றை சுத்தப்படுத்தி இந்த கிராமத்து மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். 21ம் நூற்றாண்டிலும் தொடரும் இந்த சாதிய வன்கொடுமை குறித்து முதல்வர் சித்தராமையா பதிலளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.