பேரூராட்சி அலுவலகத்திலேயே தலித்துகளுக்கு இரட்டை டம்ளர் முறை....ஈரோடு ஆட்சியரிடம் 'திடுக்' புகார்
ஈரோடு: சத்தியமங்கலம் கெம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திலேயே பணிபுரியும் தலித் ஊழியர்கள் டீ குடிப்பதற்கும் கூட இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அதிர வைக்கும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெரியசாமி உட்பட 8 பேர் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கே.என்.பாளையம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தினக்கூலி வாங்கும் நிரந்தர தொழிலாளர்கள் 8 பேர் பணி செய்து வருகிறோம்.
எங்களுக்கு மொத்தமாக 45 ஆயிரம் ரூபாய்க்கு செக் வழங்குகின்றனர். அதை கொண்டுபோய் நாங்கள் வங்கியில் பணமாக மாற்றி பணத்தை கிளார்க் மணிகண்டனிடம் வழங்க வேண்டும்.
அவர் 9,500 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை எட்டு பேருக்கும் பிரித்து கொடுப்பார். எங்களுக்கு முறையான வருகை பதிவேடு இல்லை.
பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில் இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர். செப்டிக் டேங்க் கழிவுகளை எங்களை வைத்தே அகற்றும்படி கூறுகின்றனர். இம்மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.