திருப்பூர் பாப்பம்மாளை பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேர் கைது
திருப்பூரில் தீண்டாமை கொடுமையால் சமையலர் பாப்பம்மாளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் தீண்டாமை கொடுமையால் சமையலர் பாப்பம்மாளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் கடந்த திங்கள்கிழமை சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் பணியாளராக பணியமர்த்தப்பட்டார்.
இவர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளியில் இவர் சமைத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர் கூறினர். இதையடுத்து அந்த பள்ளியையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, அவினாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பம்மாளை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பணியிடமாற்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
பாப்பம்மாள் திருமலை கவுண்டம்பாளைய அரசு பள்ளிக்கூடத்திற்கே மாற்றப்பட்டுள்ளார். இவர் சமைப்பதையே அனைத்து மாணவர்களும் சாப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுக்க பெரியாரிய, தலித்திய இயக்கத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போராளிகள், பாப்பம்மாள் வீட்டிற்கு விருந்திற்கு சென்று இருக்கிறார்கள். உணவு சமைக்க தேவையான பொருளுடன் சென்று, அவரை சமைக்க சொல்லி ஒன்றாக அவர் கையால் பரிமாற வைத்து, சமைக்க அவருக்கு உதவி, அவருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு வந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சாதி பெயரை கூறி பாப்பம்மாளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.