கறுப்பு பணம்: வேண்டாத டெபாசிட்டுகளால் பரிதவிப்பில் ஏழைகள்
சென்னை: வேண்டாத டெபாசிட்டுக்கு ஆசைப்படும் ஏழைகளுக்கு சிக்கல்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை கொடுத்து புதிய நோட்டுகளை மாற்ற ஏராளமானோர் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அன்றாட தேவைக்காக பணப் பரிமாற்றம் செய்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் கணக்கில் வராத கறுப்பு பணத்தை மாற்றவும் சிலர் குறுக்கு வழியில் முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக கந்து வட்டிக்கு பணம் கொடுத்து சேர்த்தவர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ரகசியமாக ஆள் பிடிக்கும் வேலையை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதே போன்று பல்வேறு விதங்களில் சேர்ந்துள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக்க ரகசியமாக முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக முதியோர் உதவித் தொகை பெறுபவர்கள், தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகள், சிறிய அளவில் சேமிப்பு தொகையுடன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆகியோரை கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் குறி வைக்கிறார்கள்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற அடிப்படையிலேயே கல்வி, திருமணம், மகப்பேறு, மாற்றுத் திறனாளிகள், முதியோர் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அடுத்தவர் பணத்தை வங்கி கணக்கில் செலுத்திய பலர் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர் என்ற தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வருமான வரித்துறையினரின் விசாரணை வட்டத்திற்குள் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.