ஐ.ஏ.எஸ். தேர்வு: பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை
சென்னை: யு.பி.எஸ்.சி தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யூபிஎஸ்சி) 2013-ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக தேர்வு எழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், தமிழகத்தில் தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த 109 பேரில், பினோ ஜெபின் என்ற பார்வையற்ற மாணவியும், முகமது அஸ்ரப் என்ற மாற்றுத் திறனாளி மாணவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இம்மையத்தைச் சேர்ந்த 46 பேர் இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி பினோ ஜெபின் தற்போது ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
பிறவியிலேயே பார்வையற்ற இவர், 2-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பாடங்களை பிரெய்ல் முறையில் படித்து தேர்வு எழுதியது கவனிக்கத்தக்கது.