ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு கட்.. ஏழைக் குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் எடப்பாடி அரசு
ரேஷன் கடைகள்தான் ஏழைகளின் அடிப்படை உணவுத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. பொது மக்களுக்கு இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு கிடைக்காது என்று நிலை உருவாகியுள்ளதால் மக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், குடும்பத்திற்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியாரிடம் இருந்து வாங்குகிறது. பின்னர் அது ரேஷன் கடைகளுக்கு அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாதந்தோறும், 13 ஆயிரத்து 500 டன் துவரம் பருப்பு 7000 டன் உளுத்தம் பருப்பு ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், துவரம் பருப்புக்கு பதிலாக கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பருப்பு கட்
இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, சிறப்பு விநியோக திட்டத்தை நிறுத்த, அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, ரேஷனில் பருப்பு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது.
மக்கள் அதிருப்தி
இதையடுத்து, 199 கோடி ரூபாய்க்கு, 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு வாங்கப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பட்ஜெட்டில், ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், உளுத்தம் பருப்பு வழங்கப்படுவது நிறுத்தப்படுவதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கல்லா காலி
சிறப்பு திட்ட காலக்கெடு, 2016 டிசம்பரில் முடிந்த நிலையில், நிதி பற்றாக்குறை இருந்ததால், அந்தத் திட்டத்தை அரசு நீட்டிக்கவில்லை. அந்த விவரத்தை, மக்களுக்கு முறைப்படி தெரிவிக்காததால் பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று உணவு வழங்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட்டிலும் பருப்பில்லை
இக்கட்டான இந்த சூழலில், சிறப்பு விநியோக திட்டம் குறித்த அறிவிப்பில், பட்ஜெட்டிலும் உளுத்தம் பருப்பு இடம் பெறவில்லை. அதனால், இனி, ரேஷன் கடைகளில், உளுத்தம் பருப்பு கிடைக்காது. இந்த விவரங்கள் தெரியாமல் மக்கள் உளுத்தம் பருப்பு கிடைக்காத கோபத்தில் இருக்கின்றனர்.
என்ன செய்கிறார் எடப்பாடியார்?
மக்களுக்கு அடிப்படை தேவையான பருப்பு வகைகளை ரேஷன் கடைகளில் வழங்குவதை முற்றிலுமாக எடப்பாடி பழனிச்சாமி அரசு நிறுத்தியுள்ளது மக்கள் விரோதமாகவே கருதப்படுகிறது. இது ஏழை எளியோரின் வயிற்றில் அடிப்பதற்கு சமம் என்பதை தமிழக அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வருகின்றனர்.