ஊரப்பாக்கம் வீதியில் கிடந்த தலை.. பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த பயங்கரம்
பெண் விவகாரம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஊரப்பாக்கம்: 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தலை மட்டும் துண்டாக கிடந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடப்பேரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். ஆட்டோ ஓட்டுனர். இவர் மீது தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ராஜீவ்காந்தி நகரில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார்.
மோதலாக வெடித்தது
அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு இது பிடிக்காத காரணத்தினால், கமலக்கண்ணனை பலமுறை எச்சரித்தார். சில சமயம் இருவருக்குள்ளும் மோதலும் வெடித்தது. இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தனியாக கிடந்த தலை
இந்நிலையில் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் வீதியில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலை மட்டும் துண்டாக கிடந்தது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற மக்கள் அலறியடித்து ஓடியதுடன், கூடுவாஞ்சேரிபோலீசாருக்கும் தகவல் அளித்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பே அந்த தலை விழுந்து கிடந்தது.
உடலை தேடும் பணி
விரைந்து வந்த போலீசார் தனியாக விழுந்து கிடந்த தலையை கைப்பற்றினர். உடலை தேடும் பணியை தொடர்ந்தனர். ஆனால் உடலை கைப்பற்ற முடியாத காரணத்தினால் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிச்சென்று நின்றுவிட்டது.
கொலைகாரர்களுக்கு வலை
அதனால் கமலக்கண்ணனை கொலை செய்துவிட்டு, மர்மகும்பல் வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த கொலை குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடமும், ஏற்கனவே கமலக்கண்ணனுடன் மோதிய பால்ராஜிடமும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பிச் சென்ற கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.