தமிழகத்திலுள்ள அமெரிக்கர்கள் உஷாராக இருக்கவும்.. சென்னை துணை தூதரகம் எச்சரிக்கை!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை முன்னிட்டு ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் அமெரிக்க துணை தூதரகத்தில் தற்காலிகமாக விசா வழங்கும் சேவை நிறுத
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை முன்னிட்டு சென்னை உள்பட மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் இங்குள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் தற்காலிகமாக விசா வழங்கும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக் குறைவு காரணமாக தமிழகத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழல் குறித்து அந்த மாநில மக்களுக்கு சில ஆலோசனை வழங்கப்படுகிறது. அதன்படி, அமெரிக்க துணை தூதரகம் வழக்கமான விசா வழங்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், அமைதியான வழியில் ஆங்காங்கே கூடுவது கூட வன்முறைக்கு வழிவகுக்கும். எனவே, அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை பாதுகாப்பு கருதி மக்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல் கூட்டமாக கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பதற்றமான சூழல் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த உடனடித் தகவல்களைப் பெற ஊடகங்களை பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உங்களின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பாதுகாப்பு மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.
தனிப்பட்ட பாதுகாப்புக்கு உயர் முக்கியத்துவம் அளித்து அதற்கான உரிய விழிப்புடன் செயல்படுமாறும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் அமெரிக்க துணை தூதரக அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் நிலைமை சரியான பிறகு உரிய அறிவிப்புகள் வழங்கப்பட்டு விசா வழங்கும் சேவை மீண்டும் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ,இதனிடையே, சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
'சமூக வலைதளங்கள் அனைத்தும் காவல் துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்கையில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.