அமெரிக்க தேர்தல் களம்.. எப்படி நடக்கும் தேர்தல்.. யார் வெற்றியை யார் தீர்மானிப்பது
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எப்படி யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
சென்னை: பொதுமக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து அமெரிக்க அதிபரை தேர்தெடுத்தாலும், கடைசி நேரத்தில் கூட, தேர்வு செய்வோர் அவையில் இருந்து போதிய வாக்குகளை பெறாவிட்டால் அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவுவார் என்கிறது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம்.
இந்தியாவில் தேர்தல் என்றால் ஒரு நாள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அன்று, மக்கள் எல்லோரும் வாக்களிப்பார்கள். பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்படுபார்கள். ஜனாதிபதி தேர்தல் என்றாலும் தேர்தல் நாள் அறிவிக்கப்படும். தேர்தல் நடக்கும். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டியதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வாக்களிக்கத்தால் போதும். ஆக எப்படி பார்த்தாலும் இந்திய தேர்தல் முறை கேட்கவும் பார்க்கவும் ஈசியா இருக்கிறது.
ஆனால் அமெரிக்கா அதிபர் தேர்தல் முறை அப்படி இல்லை. உலக நாடுகளை கைக்குள் வைத்திருக்கும் பெரிய நாடு அமெரிக்கா என்பதால் உலக அளவில் எதிர்ப்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அங்கு நடக்கும் தேர்தல் முறையே கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாலும் அனைவரின் பார்வையும் அந்தப் பக்கம் இருப்பது இயல்புதான்.
அமெரிக்க தேர்தல் நடத்தும் முறையில் ஏன் இவ்வளவு சிக்கல்கள். இதற்கான விடையை அமெரிக்க கூட்டாட்சி முறைக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டங்களில் காண முடியும். 1787ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் நடைபெற்ற அரசியலமைப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட மாநிலங்கள், தேர்தல்கள் உள்பட தங்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்க விரும்பின. அதற்கேற்றபடி அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள், நலன்கள் பற்றிய சரத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அமெரிக்க தேர்தலின் போது மக்கள் நேரடியாக வாக்களிக்கிறார்கள். போட்டியிடும் வேட்பாளர் நாட்டில் உள்ள மக்களிடம் இருந்து பெரும்பான்மை வாக்குகளை மட்டும் பெற்றால் போதாது. அதற்கும் மேலாக அவர், மாநிலங்களில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு செய்வோர் அவையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். இருக்கும் 50 மாநிலங்களில் உள்ள வாக்காளர் எண்ணிக்கைப் பொருத்து தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும்.
அமெரிக்காவில், மாநிலங்களில் இருந்து அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு செய்வோர் அவையில் மொத்தம் 538 உறுப்பினர்கள் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் இந்த அவையில் 270 வாக்குகளை பெற வேண்டும்.
ஆக, மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து வெற்றி பெருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தாலும், தேர்வு செய்வோர் அவைகளில் இருந்து 270 வாக்குகளை பெற்றால்தான் அதிபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அப்படி, 270 வாக்குகளை பெற முடியாமல் போனால் வெற்றி வாய்ப்பை வேட்பாளர் இழக்க வேண்டி வரும். அதே போன்று இந்த தேர்தலை நடத்தும் பொறுப்பு மாநிலங்களுக்குத்தான் உண்டு என்பது மிக முக்கியமான விஷயம்.
இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் 2001ம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர் மக்கள் நேரடியாக அளித்த வாக்குகளின் மூலம் பெரும்பான்மை பெற்றாலும், தோல்வியை தழுவ வேண்டி இருந்தது. மாநிலங்களில் இருந்து தேர்வு செய்வோர் அவையில் புளோரிடா மாநிலத்தை இருந்து அல் கோருக்கு வாக்குகள் கிடைக்காததால் புஷ்ஷிடம் தோற்றுப் போனார். இதே போன்று பல சம்பவங்கள் அமெரிக்க தேர்தல் வரலாற்றில் நடைபெற்றுள்ளது.
தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களத்தில் உள்ள ஹிலாரி கிளிண்டனுக்கும், டொனால்ட்டு ட்ரம்புக்கும் மக்கள் பெரும்பான்மை ஆதரவு அளித்தாலும், மாநிலங்களில் உள்ள தேர்வு செய்வோர் அவையில் இருந்து பெறப்போகும் வாக்குகளைப் பொருத்தே இவர்களது வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும்.