அமெரிக்க கப்பலுக்கு டீசல் கொடுத்த இருவருக்கு ஜாமீன்!
கடந்த 11 ஆம் தேதி இந்திய கடல் எல்லைக்குள் அமெரிக்காவை சேர்ந்த "சீமென் கார்டு ஓகியா" என்ற கப்பல் சட்ட விரோதமாக நின்றது. உளவுத் துறை மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய கடலோர காவல் படையினர் அந்த கப்பலை சுற்றி வளைத்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
அந்த கப்பலில் இருந்தவர்களிடம் க்யூ பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த கப்பல் டீசல் நிரப்ப நின்றதாக தெரிய வந்தது. இதையடுத்து அந்த கப்பலுக்கு சட்ட விரோதமாக டீசல் வழங்கிய, தூத்துக்குடியை சேர்ந்த மரிய ஆண்டன் விஜய், ரஞ்சித்குமார், விஜய், முருகேசன், செல்வம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அந்த ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, முருகேசன், செல்வம் ஆகிய இருவருக்கு மட்டும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.