அமெரிக்க கப்பலின் கேப்டன், என்ஜினியரும் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சர்ச்சைக்குள்ளாகிய அமெரிக்க பாதுகாப்பு கப்பலின் கேப்டன் மற்றும் என்ஜீனியரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துககுடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த சீமொன் கார்டு ஓகியா என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 11ம் தேதி இரவு மடக்கி பிடித்தனர். இந்த கப்பலில் கேப்டன் உள்பட 35 பேர் இருந்தனர்.
அவர்களிடம் 35 அதி நவீன துப்பாக்கிகள், 5675 தோட்டாக்கள் இருந்தன. இது தொடர்பாக கப்பலில் இருந்த 33 பேரை கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கப்பல் பராமரிப்புக்காக கேப்டன் மற்றும் என்ஜினியர் மட்டும் கப்பலில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கப்பல் நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்திடம் கப்பலை பராமரிக்கும் பணியை தற்காலிகமாக ஓப்படைத்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் அமெரிக்க கப்பலின் கேப்டன் டுட்னிக் வாலரின் மற்றும் என்ஜீனியர் சிடோரின் கோவலரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து முத்தையாபுரம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தலைமை பொறியாளர் சிடோரின் கோவலரி, போலீசார் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கூச்சலிட்ட தொடங்கினார். அதைத் தொடர்ந்து அவர்களிடம் கியூ பிரிவு எஸ்பி பவானீஸ்வரி விசாரணை நடத்தி விட்டு தூத்துக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி அகிலா தேவி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினார்.
அவர்கள் இருவரையும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யவும், பின்னர் அக் 31ம் தேதி வரை காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இருவரும் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆயுத கப்பலுக்கு டீசல் வழங்கியதாக தூத்துக்குடியை சேர்ந்த 3 பேரை பிடித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.