ஜெயலலிதா மறைவு.. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் தமிழர்கள் இரங்கல்
ஜெயலலிதா மறைவிற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்தார். அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் 6ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அமெரிக்கா
அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் போக்குவரத்து கமிஷனராக பணியாற்றி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜன் நடராஜன். "இந்திய அரசியலில் ஜெயலலிதாவின் தாக்கம் எப்போதும் நினைவு கூறப்படும். அவரைப்போல் தைரியமான பெண்ணை அரசியல் வாழ்வில் காண்பது கடினம். மிகவும் ஆளுமை மிக்க, தொலைநோக்கு திட்டம் கொண்டவர். அவரது மறைவு இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது" என்று ராஜன் நடராஜன் கூறினார்.
மிச்சிகன்
மிச்சிகன் பல்கலைக்கழக மனவியல் இணை பேராசிரியர் ராம் மகாலிங்கம், "ஜெயலலிதாவின் இறப்பு மூலம் தமிழ்நாட்டு அரசியலில் இனி நடிகர்கள் பங்களிப்பை இறுதி செய்து இருக்கிறது. பலகாலமாக தமிழக அரசியலில் நடிகர், நடிகைகள்தான் கோலோச்சினார்கள். அவருடை இழப்பு தமிழகத்திற்கு பெரும் இழப்பு" என்று கூறினார்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய கல்சுரல் சென்டரில் ஜெயலலிதா மறைவுக்கு நேற்று மாலை இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஜெயலலிதாவின் நினைவுகள் குறித்து பலரும் பேசினார்கள். ஜெயலலிதாவின் இழப்பு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களுக்கு பேரிழப்பு என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.
பிரிட்டன்
இதே போன்று பிரிட்டன் வாழ் தமிழர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி கூட்டங்களை நடத்தினார்கள். மேலும், டென்மார்க், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு நினைவேந்தல் கூட்டங்களை நடத்தினார்கள்.