கர்ப்பிணி உஷா பரிதாப பலி: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Recommended Video
டெல்லி: திருச்சியில் கர்ப்பிணி பெண் பலியானது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சியில் ஹெல்மெட் அணியாததால் ஒரு பைக்கை தனது ஜீப்பில் விரட்டி மறித்த போக்குவரத்து துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் கோபத்தில் அந்த இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்தார்.
இதில் கீழே விழுந்த 3 மாத கர்ப்பிணி உஷா உயிர் இழந்தார். இது தொடர்பான வழக்கில் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பத்திரிகை செய்தியில் உள்ளது உண்மை என்றால், இது போலீஸ் அராஜகத்துக்கு மோசமான உதாரணம் ஆகும். அந்த அப்பாவி பெண்ணின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகிறது. பணியின்போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறு போலீசாருக்கு டி.ஜி.பி. அறிவுறுத்த வேண்டும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.