நிஜமான வட சென்னை இதுதாங்க.. மக்களைக் கவர்ந்திழுத்த உழைக்கும் சனங்க போட்டோ கண்காட்சி!
காசிமேட்டில், 'உழைக்கும் சனங்க' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
Recommended Video
சென்னை: காசிமேட்டில், 'உழைக்கும் சனங்க ' என்ற தலைப்பில், மாணவர்கள் நடத்திய புகைப்பட கண்காட்சியை, பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்.
'மெட்ராஸ் மரபினர் ' என்ற குழுவின் கீழ் ஒன்றிணைந்த, சென்னை பல்கலை கழக மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், வட சென்னையில் உழைக்கும் மக்களின், அன்றாட சூழலை எடுத்துரைக்கும் வகையில், புகைப்பட கண்காட்சியை நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி, வட சென்னையில், அன்றாடம் உழைத்து ஓடாய் தேய்ந்து போகும், பாமர மக்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தினர். அவற்றை, நேற்று முன்தினம் இரவு காசிமேடு மீன் பிடித்துறைமுகம் மற்றும் தலுப்புக்கல் பகுதியில் காட்சிபடுத்தினர்.
30-க்கும் மேற்பட்ட ஓவியங்கள்
முன்னதாக, அப்பகுதி சுவற்றில், சதீஷ்குமார் குழுவினர், நங்கூரம், கப்பல், மீன்பிடித்தல் போன்ற 30-க்கும் மேற்பட்ட ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. இந்த புகைப்பட கண்காட்சி மற்றும் சுவர் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
ஒட்டுமொத்த வாழ்வியல்
விடுமுறை தினம் என்பதால், என் - 4 கடற்கரை வந்த ஏராளமான குடும்பத்தினர், புகைப்பட கண்காட்சியை கண்டு வியந்தனர். வடசென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை அங்கிருந்த புகைப்படங்கள் அடக்கியிருந்ததை கண்டு ஆச்சரியமுற்றனர். மீனவ மக்களின் இன்னல்களை பிரதிபலித்த அந்த ஓவியங்கள் குறித்து இதனை தங்களது பிள்ளைகளுக்கும் பெற்றோர் எடுத்துரைத்தனர்.
எதிர்மறை தோற்றம் மாறும்
இது குறித்து, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், சுகுமாறன் பேசியபோது கூறியதாவது: வட சென்னை மக்கள் என்றாலே, எதிர்மறையான தோற்றம் உள்ளது. அது உண்மை இல்லை. இங்கும் உழைப்புக்கு பேர் போன மக்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இதை ஆவணபடுத்த வேண்டும் என்ற அவாவின் விளைவே இந்த புகைப்பட கண்காட்சி. தொடர்ந்து, ஒளிப்பதிவின் மூலம் ஆவணபடுத்த வேண்டும். அதற்கான முயற்சியும் எடுத்து வருகிறோம். ஆவணபடுத்தல் மூலம், 20 ஆண்டுகளுக்கு பின்பும், உழைப்பால் மிளிரும் வட சென்னையை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உருவகப்படுத்திய திரைப்படங்கள்
உண்மையிலேயே வடசென்னை மக்கள் அன்பும், பாசமும் நிறைந்தவர்கள். ஆனால் திரைப்படங்களில் அதன் நிஜபார்வை நீக்கப்பட்டு போலிக்காட்சிகள் புனையப்பட்டு முற்றிலும் வேறாக அதன் முகம் காட்டப்பட்டு வருகிறது. வடசென்னை மக்கள் என்றாலே ரவுடிகளாகவும், அராஜகம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என்ற மாயையை திரைப்படங்கள் உருவகப்படுத்தி வந்துள்ளன. ஆனால் இந்த புகைப்பட கண்காட்சி மூலமாக காசிமேடு மக்களின் ஒட்டுமொத்த வாழ்வியலும் வெளிப்பட்டுள்ளதுடன், சினிமாவின் போலி முகங்கள் எல்லாம் கிழித்தெறியப்பட்டுள்ளன. இதை இளையதலைமுறைகளுக்கு எடுத்துக்காட்ட பல்கலை. மாணவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டுக்குரிய ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.